Thursday 1 August 2019

கொள்முதல்

கட்டுமானப் பொறியியல் முடித்த அடுத்த ஆண்டே நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். அதில் கொள்முதல் மிகவும் முக்கியமானது. பொருள் கொள்முதல், அதனை வேலை நடைபெறும் இடத்துக்கு கொண்டு வருதல், பத்திரமாக பாதுகாத்தல் ஆகியவை அதில் மாறாத அடிப்படையான வேலைகள். எப்போதும் முழுமையான கவனம் இருக்க வேண்டும். கட்டுமான இடத்திற்கு மணல் வந்தால் அதன் கொள்ளளவை அளக்க வேண்டும். லாரி டிரைவரும் லோடு மேன்களும் ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனாலும் அளக்காமல் கொட்டிக் கொள்ள கூடாது. ஜல்லி லாரியை அளக்க வேண்டும். செங்கல் காளவாய்க்குச் சென்று கல்லின் தரத்தை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். நான் பணியைத் துவங்கிய போது வித்யாசமாக ஏதேனும் கேள்வி கேட்பேன். இரண்டு நாட்கள் என் தந்தை பார்த்தார். மூன்றாம் நாள் என்னை அழைத்து ‘’நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்’’ என்றார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் நான் அவர் சொன்னதை அப்படியே கேட்டேன். உண்மையில் அவர் எப்போதுமே யாரிடமும் இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார். எது ஒழுங்கோ அது மட்டுமே நடக்க வேண்டும்; அதைத் தவிர வேறேதும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்பார். வேலையிலும் வேலையின் தரத்திலும் எவ்விதமான சமரசமும் அற்றவர். நான் தரமான வேலையை மட்டுமே செய்பவன் என்பது ஒரு தலைநிமிர்வு. அதை நான் என் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

கட்டுமானப் பணிகளில் கொள்முதல் ஆயிரக்கணக்கில் இருக்கும். நான் கடைக்குக் கூட போய் பழக்கம் இல்லாதவன். ஆனாலும் நான் தான் பணம் பட்டுவாடா செய்வேன். மிகச் சரியாகவே செய்தேன். காலையில் ஒரு லட்சம் ரூபாய் கையில் இருக்கும். மாலையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே மீதம் இருக்கும். அப்போது நான் எண்ணிப் பார்ப்பேன்: வாழ்நாள் முழுக்க சாதாரண பொருட்களை விரும்பி வாங்கி மகிழ்பவர் ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க செலவிடும் தொகையை நான் சில வாரங்களில் பட்டுவாடா செய்கிறேன் என்பதால் எந்த பொருளும் இதுநாள் வரை வாங்காதவன் என்பது பின்னடைவு அல்ல. சந்தோஷமாக இருக்கும். ஸ்டீல் கொள்முதல். சிமெண்ட் கொள்முதல். பெயிண்ட் கொள்முதல். மரம் கொள்முதல். பல வருட பழக்கம் உள்ளவன் போல அதில் இயல்பாக இணைந்து கொண்டேன்.

நான் பள்ளியில் படித்த போது தேசிய மாணவர் படையில் இருந்தேன். அதன் நான்கு குறிக்கோள்கள் இப்போதும் நினைவிருக்கிறது. 

1. Obey with smile
2.Be punctual
3.Dont tell lies and make no excuses
4.Honesty is the best policy

மிக எளிய மனிதனுக்குக் கூட சொல்லரசியின் கருணை கிடைத்து விடுகிறது.