Wednesday 25 December 2019

கற்கை நன்றே


சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் காந்திய அறிஞர் திரு. தரம்பால் அவர்களின் The Beautiful Tree நூலை வாசித்து விட்டு அதனைப் பற்றி என்னிடம் மிகவும் சிலாகித்துப் பேசினார். அந்நூல் உ.வே.சாமிநாத ஐயரின் ‘’என் சரித்திரம்’’ நூலை நினைவுபடுத்தியதாகச் சொன்னார். உ.வே.சா கல்வி கற்ற காலத்தில் இந்தியக் கல்விமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முழுமையாகக் கைவிடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையிலும் தனது இறுதி மூச்சைத் திரட்டிக் கொண்டு செயல்பட்டதன் சித்திரமே அந்நூலில் உள்ளது என்று சொல்லி உ.வே.சா எழுதிய ‘’மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’’ என்ற நூலை வாசிக்கச் சொன்னேன்.

சுந்தர ராமசாமி ’’விஷ வட்டம்’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். தமிழகத்தின் இன்றைய சூழலைக் குறிக்க அதுவே சரியான வார்த்தை.

தமிழ்நாட்டின் கல்வி சீரழிந்துள்ளது. திராவிட இயக்கங்களும் இடதுசாரிகளும் தமிழ்நாட்டின் கல்வியைச் சீரழித்துள்ளனர். தமிழ்நாட்டின் எல்லா கல்விச் சீர்கேடுகளுக்கும் இவர்களே எல்லா விதத்திலும் காரணம்.

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். ராஜாஜி தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள் அதிக நேரம் இயங்க வேண்டும் என்றார். இருக்கும் குறைவான கட்டமைப்பில் அதிக அளவில் மாணவர்களுக்குக் கல்வி தர பள்ளிகள் இரண்டு ஷிஃப்ட்டாக செயல்பட வேண்டும் என்று எண்ணினார். இது மாணவர்களுக்குப் பயன் தரக்கூடியது. ஆசிரியர்களுக்கு அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியத்தை உண்டாக்குவது. எனவே அதனை ஆசிரியர்கள் எதிர்த்தனர். ஆசிரியர்களுக்கு ராஜாஜி மேல் இருந்த எதிர்ப்பை தனக்கு சாதகமாகத் திருப்பிக் கொண்ட திராவிட இயக்கம் ‘’ஷிப்ட் முறையை’’ குலக்கல்வி திட்டம் எனத் திரித்து அதற்கு ஜாதி சாயம் பூசினர். தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களுக்கும் திராவிட இயக்கத்துக்குமான உறவு அங்கிருந்து துவங்குகிறது. இன்றுவரை நீடிக்கிறது. தமிழ்நாட்டின் கல்விச் சூழல் அழிவை நோக்கிச் சென்றதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று இது.

மூன்று தலைமுறைகள் கடந்து விட்டன. அரசாங்கம் அளிக்கும் கல்வி என்பது சமூகங்களில் பெரும் மாற்றத்தை உருவாக்கக் கூடிய சாதனம். தமிழ்நாட்டில் அது சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதே யதார்த்தம். இன்றும் மத்திய அரசாங்கத்தின் நிதியும் உலக வங்கி அளிக்கும் நிதியுமே தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. நமக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று அதில் உள்ள புதிய கட்டிடம் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது, ஆய்வகம் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது, கழிவறைகள் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது என்று பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களே அவை. மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்துகிறது அல்லது உலக வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது. கல்விக்காக மாநில அரசாங்கம் செலவழிக்கும் தொகை என்பது என்ன? செலவழிக்கும் முழுத் தொகையும் ஆசிரியர்களின் ஊதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது.

மிக அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மாணவர்களின் கற்றலை அளவிட அளவுகோல் எது? தேர்வுகள். ஆனால் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் சொல்கிறது. எனவே அனைவரும் ஒன்பதாம் வகுப்பு வரை எதுவும் கற்காமல் வந்து சேர முடியும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதுவும் கல்லாமல் வந்து சேர்ந்த மாணவன் தேர்ச்சி அடையாமல் போவானே? ஆசிரியர்களும் அரசாங்கமும் பார்த்தார்கள். மதிப்பீட்டை தளர்வாக வைத்து அதிலும் ஜோடிக்கப்பட்ட மதிப்பெண்களை வழங்கி மாணவர்களைத் தேர்ச்சி அடையச் செய்கின்றனர். உலகில் எந்த சமூகத்திலாவது இது போன்ற ஓர் அவலம் இருக்குமா என்று தெரியவில்லை.

நண்பர்களின் குழந்தைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆரம்பக் கல்வியைப் பயில்கின்றனர். அங்கே அடிப்படைப் பயிற்சியே நூல் வாசிப்பு தான். ஒரு வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒரு நூல் அளிக்கப்படும். அதனை மாணவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும். அந்நூல் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அந்நூல் குறித்து பதினைந்து நிமிடம் பேச வேண்டும். வாசிப்பு, எழுத்து, பேச்சு ஆகியவற்றுக்கான பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் சுயமாக மாணவர்கள் சிந்திக்கும் திறனைப் பெறுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளின் திறனின்மைக்குக் காரணம் திராவிடக் கட்சிகள். ஈசலெனப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் திராவிடக் கட்சிகள். தனியார் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை திராவிடக் கட்சியினரைச் சார்ந்தவை. அவர்களுடைய கல்லூரிகளில் சேர்க்கை எவ்விதத்திலும் குறையக் கூடாது என்பதற்காகவே பொறியியல் பட்டப்படிப்பில் சேர இருந்த குறைந்தபட்ச மதிப்பெண் நீக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சியடைந்த அனைவரும் பொறியியலில் சேரலாம் என்று உருவாக்கப்பட்டது. எல்லா நுழைவுத் தேர்வுகளுக்கும் எதிராக இருப்பவர்கள் திராவிடக் கட்சிகள்.

எந்த சமூகத்தின் கல்வியும் அச்சமூகம் எதிர்கொள்ளும் பிரதிபலிக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பள்ளிகள் மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டிய குறைந்தபட்ச விஷயங்கள் என நான் கருதுவதைப் பட்டியலிட்டுள்ளேன்.

1. பள்ளிக் கல்வியை 12 ஆண்டுகள் பயிலும் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு இந்திய மாநிலம் அதன் தலைநகரம் அதில் உள்ள மாவட்டங்கள் அங்கு பேசப்படும் மொழிகள் ஆகியவற்றை அறிய வேண்டும்.

2. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பை முற்றும் அறிந்திருக்க வேண்டும்.

3. இந்தியாவின் முக்கியமான பேரரசுகள் ஆற்றிய மகத்தான மக்கள் நலப் பணிகள் குறித்து அறிய வேண்டும்.

4. இந்திய ராணுவம் குறித்த தகவல்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

5. மனித உடல், நோய்கள், உடற்பயிற்சி மற்றும் யோகா குறித்து விளக்கப்பட வேண்டும். தினமும் எல்லா மாணவர்களுக்கும் அரைமணி நேரம் யோகப்பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

6. ரயில் அட்டவணையைப் பயன்படுத்துதல், ரயில் முன்பதிவு படிவங்கள் நிரப்புதல், வங்கிப் படிவங்களை நிரப்புதல் குறித்து சொல்லித் தர வேண்டும்.

7. வணிகத்தின் அடிப்படைகள் போதிக்கப்பட வேண்டும்.