Wednesday 29 April 2020

பிரமிப்பு

ஒரு மோட்டார் சைக்கிள் பயணியான என்னைப் பயணத்தில் பிரமிக்கச் செய்யும் இந்திய மாநிலம் ஒன்று உண்டென்றால் அது ஆந்திரப் பிரதேசம். அதாவது தற்போதைய ஆந்திரமும் தெலங்கானாவும் சேர்ந்திருக்கும் மாநிலம். எனது ஊரிலிருந்து வடக்கே முன்னூறு கிலோமீட்டர் பயணித்தாலே தமிழ்நாட்டைத் தாண்டி விடலாம். தில்லி வரை சென்றோம் என்றால் அந்த பாதையில் மகாராஷ்ட்ராவை ஒரே நாள் பயணத்தில் தாண்டிச் செல்ல முடியும். மத்தியப் பிரதேசமும் அவ்வாறே. கடலோரக் கருநாடகத்தை ஒரே நாள் பயணத்தில் கடக்கலாம். காலை மங்களூரில் கிளம்பினால் இரவு கோவா சென்று விடலாம். தேவை என்றால் கார்வாரில் ஒரு இரவுத் தங்கல். ஆனால் ஆந்திரம் பெரும் வெளி. பாறைகள், வெட்டவெளிகள், வயல்பரப்புகள், பெருநதிகள், வாய்க்கால்கள் என நம்மால் எளிதில் மனதில் தொகுக்க இயலாத பிராந்தியம். கிராமங்களின் தரிசனம் என்பதைக் கண்கூடாகக் காண முடியும். நிறைய பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேப்பமரங்கள், அதன் அடியில் இருக்கும் அம்மன் ஆலயங்கள், மாலையில் மரநிழலில் கூடி நிற்கும் மக்கள் என மறக்க முடியாத காட்சிகளால் ஆனது ஆந்திரம். விநாயகர் அம்மையப்பனைச் சுற்றி வந்தது போல நாம் பழைய ஒருங்கிணைந்த ஆந்திராவைச் சுற்றினாலே கால்வாசி இந்தியாவைச் சுற்றி வந்ததற்கு சமம்.