Saturday 10 October 2020

நூல் அகம்

ஈஷ்  ஊருக்கு வந்திருக்கிறான். நான் அவனைப் பற்றி தளத்தில் சத்யம் சிவம் என்ற பதிவில் முன்னர் எழுதியிருக்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பில் அவனுக்கு ஒரு தேர்வு (கம்ப்யூட்டர் சயின்ஸ்) மீதியிருந்தது. பின்னர் அந்த தேர்வு எழுதத் தேவையில்லை என்றானது. சிவகாசியில் ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்துள்ளான். ஆனால் இன்னும் கல்லூரி செல்லத் துவங்காததால் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகச் சொல்கிறான்.

’’ஈஷ்! எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்.’’

‘’சொல்லுங்க அங்கிள்! செஞ்சிடுவோம்’’

‘’என்னோட புக் ஷெல்ஃபை அடுக்கணும்’’

‘’ம்! ஓ.கே’’

‘’அதில பாரு நாம புக்ஸை பொயட்ரி, நாவல், ஷார்ட் ஸ்டோரி, நான் ஃபிக்‌ஷன் இப்படி பிரிக்கணும்’’

‘’சரி’’

‘’புக்ஸை எடுத்து ரூமுல பரப்புனோம்னா ரூம் முழுக்க நிறைஞ்சிரும். நம்மால ரூமுக்குள்ள போக வர முடியாது. அதனால நாம ஒர்க்கை ஆரம்பிச்சோம்னா ஒரு நாள் ரெண்டு நாள்ல முடிச்சிடனும்’’

‘’லெட் அஸ் டிரை’’

அ-புனைவுகள் என்னிடம் அதிகம் இருக்கக் கூடும் என்று எண்ணியிருந்தேன். எனினும் அவற்றுக்குச் சமானமான எண்ணிக்கையில் புனைவுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தைக் கையில் எடுக்கும் போதும் அது தொடர்பான நினைவுகள். புத்தகத்தை வாசித்த நினைவுகள். 

ஈஷ் ஒவ்வொரு புத்தகமாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். நான் பிரித்து வைத்தேன். ஒரு குறிப்பேட்டில் புத்தகங்களைக் குறித்து வைக்கலாமா என்று யோசித்தேன். தேவைப்படாது. பிரிவு வாரியாக அடுக்கி தினமும் புத்தகங்களின் பெயர்கள் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தாலே போதும். 

ராகுல் திராவிட் குறித்த புத்தகம் ஒன்றை ஈஷ்ஷுக்கு பிரியப் பரிசாக அளித்தேன். 

’’நீங்க ஐடியாவை சொல்லுங்க அங்கிள்! நான் அடுக்கறன்.’’

இரண்டு நாட்கள் மதிய நேரத்தில் வந்து மூன்று மணி நேரம் உதவினான். 

அவனுக்குப் புரியாத ஒன்று அடுக்கும் நேரத்தில் இவர் ஏன் நின்றபடியே புத்தகம் வாசிக்க ஆரம்பித்து விடுகிறார் என்பது. புத்தகத்தின் மீது தீரா நேசம் உள்ளவர்களால் புத்தகங்களை அடுக்கும் போது புத்தகங்களை வாசிக்காமல் இருக்க முடியாது. பல ஞாபகங்கள் வந்து அலை மோதின. புத்தகங்களின் எத்தனை வாக்கியங்கள் வாழ்க்கை முழுதும் கூட வந்துள்ளன. எத்தனை அறிஞர்களை ஞானிகளை காலத்தைக் கடந்தும் நம்மால் சந்திக்க முடிகிறது. ‘’இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் தம் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.’’

பின்னர் இரண்டு நாட்கள் வரவில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பந்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் நாள் முழுக்க எதுவும் செய்யாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தினமும் ஐம்பது புத்தகங்கள் என எடுத்து வைத்தேன். 

ஒரு வேலையை ஒருவரே செய்வதற்கும் பலர் சேர்ந்து செய்வதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. ‘’கூடித் தொழில் செய்’’ என்பது பாரதியாரின் புதிய ஆத்திசூடி. Sub conscious ஆக நமது வேலைத்திறன் மேம்படும். பலர் இணைந்து ஒரு செயல் ஆற்றும் போது அவர்கள் தனித்தனியாக ஆற்றக்கூடிய வேலையின் அளவை விட கூடுதலான அளவு வேலை செய்யப்படும். 

இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் காலையிலிருந்து அவர்கள் வீட்டில் நிகழ்ந்த பூசனைக்கு உதவிக் கொண்டிருந்தான். வழக்கமாக அவன் இரவுலாவி. அதிகாலை 4 மணி வரை விழித்திருப்பான். இசை ரசிகன். இரவில் வெகுநேரம் இசை கேட்கும் பழக்கம் உள்ளவன். சாஸ்திரிய இசை, மேற்கத்திய இசை இரண்டும் கேட்பான். அவனது ரிங் டோன்கள் , மெஸேஜ் டோன்கள் மிக நூதனமாக இருக்கும். 

‘’ஈஷ்! நீ ஏன் இப்படி காலைல 4 மணிக்கு வரைக்கும் முழிச்சிட்டு இருக்க’’

‘’அங்கிள்! மியூசிக் நம்ம இதயத்தோடு பேசறது. பகல் மெட்டீரியலிஸ்டிக் வேர்ல்டுக்கானது. இரவு தான் இசைக்கானது.’’

நேற்று இரவு அவன் வீட்டில் கண்டிப்பாக 10 மணிக்கெல்லாம் படுத்து உறங்கி விட வேண்டும் என கண்டிப்பான கட்டளை இட்டு விட்டார்கள். 

இன்று மதியம் அறைக்கு வந்தான். அறை முழுதும் புத்தகங்கள். 

‘’ஈஷ்! எல்லாம் தனித்தனியா பிரிஞ்சு இருக்கு. அப்படியே ரேக்-ல வைக்கணும். நீ ஒன்னு ஒன்னா எடுத்துக் குடு. நான் வைக்கறன். சரியா?’’

‘’ஓ.கே. அங்கிள்’’

‘’டூ செலிப்ரேட் திஸ் மொமண்ட், லெட் அஸ் ரீட் ஏ போயம்’’

‘’நைஸ் அங்கிள்’’

ஒரு கவிதையை வாசித்து விட்டு வேலையை ஆரம்பித்தோம். மூன்று மணி நேரம் ஆனது. 

நடுவில் ஈஷ் கேட்டான். 

‘’உங்களுக்கு காந்தி ரொம்ப பிடிக்குமா அங்கிள்?’’

‘’ஆமாம் தம்பி! ஏன் கேக்கற?’’

‘’நிறைய காந்தி பத்திய புக் உங்க கிட்ட இருக்கு. அதனால கேட்டன்.’’

‘’ஆமாம்பா! எனக்கு காந்தியை ரொம்ப பிடிக்கும்.’’

’’காந்தின்னா அமைதியா அங்கிள்’’

‘’அமைதி - அது பொதுவான வார்த்தை. நான் காந்தியோட முக்கியமான விஷயமா நினைக்கறது அவரோட inclusiveness.  அவரோட organizational capacities.''

''அப்படின்னா?’’

‘’இப்ப நம்ம ஊரையே எடுத்துக்க. காந்தி வர்ரதுக்கு முன்னடி காங்கிரஸ்-ல 50 பேர் மெம்பரா இருந்திருப்பாங்க. அதுல 25 பேர் அட்வகேட்ஸ். 25 பேர் லேண்ட் லார்டு. காந்தி வந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஆண்டு சந்தாவை நாலணா ஆக்கினார் (25 பைசா). ஆயிரக்கணக்கில உறுப்பினர்கள் சேர்ந்தாங்க. நாலணா சொற்பமா இருக்கலாம். ஆனா அந்த மெம்பர்ஷிப் வாங்கின ஒரு சாமானியன் பிரிட்டிஷ் ஆட்சி மேல தனக்கு இருக்கற அதிருப்தியை வெளிப்படுத்துறான். காங்கிரஸ் மெம்பர்ஷிப் அதிகமாகுதுன்னா அதுக்கு என்ன அர்த்தம்னு ஆட்சியில இருந்த பிரிட்டிஷ்காரங்களுக்கு நல்லாவே தெரியும்.’’

‘’சூப்பர் அங்கிள்’’

‘’நீ கூட காந்தியன் தான் ஈஷ்’’

‘’நானா?’’

‘’அடுத்தவங்களுக்கு தன்னால முடிஞ்ச உதவியைச் செய்யற எல்லாருமே காந்தியன் தான்’’

ஈஷுக்கு ரொம்ப சந்தோஷம். 

தேனீர் அருந்தும் நேரம் வந்தது. 

‘’தம்பி! நீ வீட்டுக்கு ஃபோன் செஞ்சு இங்கயே காஃபி குடிச்சிடறன்னு சொல்லிடு. மூணு நாள் முன்னாடி காஃபி குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் தான். இன்னைக்குத் தான் வந்திருக்க’’

அவன் ஃபோன் செய்தான். பின்னர் கீழே சமையலறைக்குச் சென்று அம்மாவிடமிருந்து தண்ணீரும் தேனீரும் எடுத்து வந்தான். 

அனைத்தையும் அடுக்கி முடித்தோம். 

நான் ஈஷூக்கு நன்றி சொன்னேன். 

‘’நாட் அட் ஆல் அங்கிள்’’