Wednesday 4 November 2020

ஆசான் சொல் - 8

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். (540)

எல்லா சமயங்களும் மனிதர்களின் - மனித சமூகங்களின் - உலகியல் வாழ்க்கை சீரானதாக இருக்க வேண்டியதற்கான அறிவுறுத்தல்களை மிகச் சிறிய அளவினாயினும் வழங்கியவாறே உள்ளன.  சக மனிதர்களுடன் நல்லுறவைப் பராமரித்தல், சமூக நியதிகளை மேம்படுத்த முயலுதல் ஆகிய விஷயங்களை அவை போதித்தவாறே உள்ளன. நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மனிதர்கள் ஒரு விஷய்த்தைப் புரிந்து கொள்ளும் - உள்வாங்கும் விதம் நிச்சயம் மாறுபடும். எனினும் யாரோ சிலர் தங்கள் லௌகிக எல்லைகளைத் தாண்டி சமூகத்துக்காக சிந்தித்த வண்ணமும் செயல்படும் வண்ணமும் உள்ளனர். 

இந்த குறள் சமூக மாற்றத்துக்காகச் செயல் புரிபவர்களுக்கான வள்ளுவரின் குறிப்பு எனக் கொள்ளலாம். 

மாற்றம் வேண்டி செயல்புரிபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எட்டு மடங்கு உழைப்பை நாளும் நல்க வேண்டியவர்கள். பொழுது விடிந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை உழைத்த வண்ணம் இருப்பார்கள். சூழல் சாதகமாகத் திரும்பும் கணம் அறுதியிட்டுக் கூற முடியாதது. எனவே கடுமையாக உழைத்த வண்ணம் இருப்பார்கள். எனினும் நிகழ்த்த விரும்பும் மாற்றம் குறித்த கற்பனைக்கு மனதில் இடம் கொடுக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். மனதின் பெரும்பகுதியை பணிக்கும் சிறு பகுதியை கற்பனைக்கும் அளிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை. உயிரோட்டமான அந்த கற்பனை செயல் புரிபவரை இலகுவாக வைத்திருக்கும். செயல் புரிபவனின் கற்பனையே என்றோ ஒருநாள் சமூக யதார்த்தமாகும். 

நாம் நிகழ்த்த விரும்பும் மாற்றத்தை அம்மாற்றத்துக்காக நாம் புரியும் செயலுடன் தினமும் எண்ணிப் பார்ப்போம் ஆயின் நமது நோக்கம் எளிதில் நிறைவேறும்.