Saturday 14 August 2021

இந்தியா : ஓர் அனுபவம்

2016ம் ஆண்டு ஒரு மோட்டார்சைக்கிளில் இந்தியாவை சுற்றி வந்தேன். அந்த 22 நாட்கள் எனக்கு பல புரிதல்களை அளித்தன. என் சிந்தனையில் என் செயல்முறையில் தாக்கங்களை உருவாக்கின. தேசம் என நான் உணர்வது லட்சோப லட்சம் எளிய மக்களையே. அந்த எளிய மக்களுக்கு லௌகிகத்தின் குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டு சேர்த்தால் அவர்கள் லௌகிகத்துக்கும் அப்பால் எண்ணற்ற செயல்களைச் செய்து முடிப்பார்கள். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கிராமங்கள் இந்திய வரலாற்றிலும் இந்தியப் பண்பாட்டிலும் முக்கியமானதாக இருக்கின்றன. கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் ஆகியவை கிராமங்களில் மிகச் சிறப்பாக இருந்திருக்கின்றன. விவசாயம், வானியல், காலநிலை, உலோகங்கள் ஆகிய துறைகளில் இந்தியாவின் பாரம்பர்யமான அறிவு என்பது இன்றளவிலும் மிகப் பெரியது. 

இரக்கமற்ற சுயநலமே உருவெடுத்த பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவைக் கொடும் பஞ்சங்களில் தள்ளி இந்திய சமூகத்தின் உளவியலில் ஆழமான அச்சத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியது. இந்திய சுதந்திர இயக்கம் அந்த  அச்சத்தை நீக்கி மக்களை ஒருங்கிணைத்தது. 

லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால் ஆகிய தலைவர்கள் இந்திய சுதந்திரம் என்பது சாத்தியமான ஒன்றே என்ற மனப்பதிவை இந்திய சமூகத்தில் உருவாக்கினர். மகாத்மா காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தில் சாமானியர்களை அதிக அளவில் பங்கெடுக்கச் செய்து பெரும் மக்கள் இயக்கமாக்கி இந்திய சுதந்திரத்தை சாத்தியமாக்கினார். இந்தியாவின் சுதந்திரத்துடன் சுதேசி கல்வி, மனித ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல், கதர் பயன்பாட்டை அதிகரித்தல், இயற்கையைச் சுரண்டாமல் இருத்தல் ஆகிய விழுமியங்களை இணைத்தே முன்னெடுத்தார் மகாத்மா. இன்றும் அதன் தேவை இருக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல ; ஒட்டு மொத்த உலகுக்கும்.