Saturday, 19 February 2022

ஒரு நண்பரின் யோசனை

நான் யோசனைகளை விரும்புபவன். எப்போதும் புதிய யோசனைகள் குறித்து சிந்திப்பவன். ஆலோசிப்பவன். யோசனைகளில் சிறிது பெரிது என்று பேதமில்லை. அது செயலாகும் இடம் பொருள் ஏவல் குறித்தே அதன் செயலாக்கம் ஈடேறுகிறது. சிறு சிறு யோசனைகள் கூட பெரும் விளைவை உருவாக்க வல்லவை என்று நான் நம்புகிறேன். அதனால் புது யோசனைகளுக்கு எப்போதும் திறந்த மனத்துடன் இருக்கிறேன். ’’காவிரி போற்றுதும்’’ நண்பர்களிடம் எப்போதும் புதிய யோசனைகளைத் தெரிவியுங்கள் என்று கோரிய வண்ணம் இருக்கிறேன். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஓர் அறிஞர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவர். ‘’ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ பதிவை வாசித்து விட்டு அந்த முயற்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் பாண்டித்யம் பெற்றவர் என்பதை நான் முன்னரே அறிவேன். கிராமப்புற மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் முயற்சி குறித்து வாழ்த்தும் போது அவர் தான் தன் சிறு வயதில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பயின்ற விபரத்தைப் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு தான் அவர் இத்தனை மொழிகள் அறிந்தவர் என்பதை நான் அறிந்தேன்.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

‘’காவிரி போற்றுதும்’’ மரம் நடும் விஷயத்தில் அவர் ஒரு யோசனையை வழங்கினார். அதாவது , இந்திய மரபில் ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்கும் உரிய மரம் என வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஜென்ம நட்சட்த்திரம் கொண்டவர் ஒரு குறிப்பிட்ட மரத்தை நட்டு வளர்ப்பார் எனில் அந்த மரத்துடன் உணர்வுபூர்வமான ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்வார் எனில் பேரியற்கையின் ஆசியை அவர் பெறுவார் என்பது ஒரு இந்திய நம்பிக்கை. நண்பரின் யோசனை ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு அவரவர் நட்சத்திரத்துக்குரிய மரத்தை வழங்கலாம் எனக் கூறியிருந்தார். இது மிக நல்ல யோசனை என்று எனக்குப் பட்டது. 


இந்திய பாரம்பர்ய நாட்காட்டியின் படி, விண்மீன்கள் 27. அவை 1. அஸ்வினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிஷம்  6. திருவாதிரை  7. புனர்பூசம்  8. பூசம் 9. ஆயில்யம்  10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. ஹஸ்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17. அனுஷம் 18. கேட்டை  19. மூலம்  20. பூராடம் 21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம் 25. பூராட்டாதி  26. உத்திரட்டாதி 27. ரேவதி

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மரம் என 27 மரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை 1. அஸ்வினி – காஞ்சிரம் 2. பரணி – நெல்லி 3. கார்த்திகை – அத்தி 4. ரோகிணி – நாவல் 5. மிருகசீரிஷம் – கருங்காலி மரம் 6. திருவாதிரை – செங்கருங்காலி மரம் 7. புனர்பூசம் – மூங்கில் 8. பூசம் – அரசமரம் 9. ஆயில்யம் – புன்னைமரம் 10. மகம் – ஆலமரம் 11. பூரம் – பலா 12. உத்திரம் – அலரி 13. ஹஸ்தம் – அத்தி அல்லது வேல மரம் 14. சித்திரை – வில்வம் 15. சுவாதி – மருத மரம் 16. விசாகம் – விளா 17. அனுஷம் – மகிழம் 18. கேட்டை – பிராயன் 19. மூலம் – மா 20. பூராடம் – வஞ்சி 21. உத்திராடம் – பலா 22. திருவோணம் – எருக்கு 23. அவிட்டம் – வன்னி 24. சதயம் – கடம்பு 25. பூராட்டாதி – தேமா 26. உத்திரட்டாதி – வேம்பு 27. ரேவதி - இலுப்பை

இந்த யோசனையைக் குறித்த எனது முதலெண்ணங்கள் : 

1. இந்த யோசனை தொல்மரபு ஒன்றின் வேர்களைக் கொண்டுள்ளது. விருட்சங்களுக்கும் இந்திய மரபுக்கும் இருக்கும் அனாதி கால உறவினை குறியீட்டுரீதியில் எடுத்துக் காட்டுவது

2. கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் , பேரக் குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் விண்மீனுக்கு உரிய மரங்களை நட்டு வளர்ப்பதை பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் மகிழ்ந்து செய்வார்கள். மரக்கன்றுகளின் வளர்ச்சி குழந்தைகள் மேல் அவர்கள் கொள்ளும் உணர்வுபூர்வமான பிரியத்தின் காரணமாக உறுதி செய்யப்படும்

 3. 27 வகையான மரங்கள் அந்த கிராமத்தில் இருப்பது நல்ல விஷயம்

 4. அரசு, ஆல் போன்ற மரங்களை அந்த நட்சத்திரத்துக்குரியவர்களை பொது இடத்தில் நட்டு அதன் பராமரிப்பை அவர்கள் வசம் அளிக்கலாம். ஆதலால் பொது இடத்திலும் சில மரங்கள் வளரும்

 5. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் - வீட்டுத் தோட்டம் இல்லாத மக்கள் வசிக்கும் இடங்களில் ஒரு சிறு பொது இடம் ஒன்றை ஒதுக்கி - குளக்கரை, வாய்க்கால் கரை போன்ற இடங்கள் - அதில் 27 விண்மீன்களுக்கும் உரிய மரங்களை நட்டுக் கொடுத்து பராமரித்துக் கொள்ள சொல்லலாம்

 6. இந்த 27 மரங்களின் மருத்துவ குணங்கள் குறித்த பிரசுரங்களை மக்களுக்கு வழங்கலாம். நமது பாரம்பர்ய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா குறித்த விழிப்புணர்வையும் அது அளிக்கும்

நமது மரபு சிவபெருமானை பிணி தீர்க்கும் மருத்துவனாகக் கருதுகிறது. உயிர்களை அழிக்கும் நஞ்சினைத் தான் உண்டு உயிர்களுக்கு அமிர்தம் அளித்துக் காத்தவன் என்கிறது. பிறவி நோய் மீண்டும் ஏற்படாமல் அருள்பவன் என்கிறது. வைத்தீஸ்வரன் நீலகண்டனாக இருக்கும் ஏதேனும் ஒரு தலத்தில் - கிராமத்தில் நண்பரின் யோசனையை செயலாக்கலாம் என எண்ணுகிறேன்.