Saturday 25 June 2022

நெருக்கடி நிலை

ஜூன் 25, 1975 என்ற தேதியை இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் மறக்க மாட்டார்கள். 

இந்திரா காந்தி என்ற தனிப்பட்ட மனிதரின் நலனுக்காக இந்திய அரசியல் சட்டம் முடக்கப்பட்ட தினம் இன்று. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மாண்புகளை நெஞ்சில் கொண்டு உருவாக்கப்பட்ட - உலகின் தலைசிறந்த சட்டங்களில் ஒன்றான - இந்திய அரசியல் சட்டம் இன்று முடக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அளித்திருக்கும் எல்லா உரிமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டம் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ‘’உயிர் வாழ்வதற்கான உரிமையை’’ வழங்குகிறது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் மூலம் இந்தியக் குடிகளின் உயிர் வாழும் உரிமையும் முடக்கப்பட்டது. 

ஜனநாயகத்தின் மீது - சட்டத்தின் ஆட்சியின் மீது - நீதிமன்ற நடைமுறைகளின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். 

எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, இந்த நாட்டின் சாமானிய பின்னணியில் இருந்து வந்த பலர் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடினர். அவர்களின் உறுதியான போராட்டமே நெருக்கடி நிலையை அறிவித்த ஆதிக்க சக்திகளை அடுத்து வந்த தேர்தலில் வீழ்த்தியது. அவர்களே இந்திய ஜனநாயகத்தைக் காத்த காவலர்கள். அவர்களின் தியாகம் இந்திய வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படும்.