Friday 1 July 2022

கடமைகளும் உரிமைகளும்

எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும் நமது நாடு குடும்பம் என்ற அமைப்பை வரலாற்றின் நெடும் பரப்பில் இன்று வரை ஏந்தி வந்துள்ளது. குடும்பம் அளிக்கும் பாதுகாப்பில் மட்டுமே கோடிக்கணக்கான மக்கள் அமைதியுறுகின்றனர். வளர்ச்சிக்கான தங்கள் சாத்தியங்களை அடைந்து முன்னேறுகின்றனர். நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாகக் கூட இருக்கலாம் ; நாம் பயின்று கொள்ள வேண்டிய - பழகிக் கொள்ள வேண்டிய - விஷயங்கள் இன்னும் பல இருக்கக்கூடும். உலகின் கால்வாசி நாடுகள் இன்னும் ஜனநாயகத்துக்குளேயே வந்து விடுவதில்லை என்பதுடனும்  மிக வளர்ந்த நாடுகளில் கூட சக மனிதர்கள் மீது அப்பட்டமான இனவெறி நிலவுகிறது என்பதுடனும் அந்த நாடுகளில் அவ்வப்போது நிகழும் துப்பாக்கிக் கொலைகளை சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அந்த நாடுகள் கொள்ளும் கவலையுடனும் இணைத்து யோசிக்க வேண்டிய விஷயம் அது.  

வெளிப்படையான நிர்வாகத்துக்கு நாம் இன்னும் நம்மை முழுமையாகப் பழக்கிக் கொள்ளவில்லை. இந்த நிலைக்கு சம பங்குக்கும் சற்று கூடுதலான பங்கு குடிமக்களும் பொறுப்பு. 

நமது மக்கள் சக்தியை சுரண்ட நினைக்கும் சக்திகள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன. எல்லா முனைகளிலும் சாத்தியமான எல்லா வழிகளிலும் தாக்குதல் தொடுக்கின்றனர். 

பிரக்ஞை கொண்ட ஒரு சமூகம் உருவாக நாட்டை நேசிக்கும் எல்லா சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது.