Saturday 12 November 2022

அப்பா - பிள்ளை

’’கங்கா ஸ்நானம்’’ கதையில் ஒரு வரி வரும். கங்கையைப் பார்க்கும் ஒருவர் தன் உடன் இருக்கும் ஒருவரிடம் கேட்பார் : ‘’ நாலு கும்மோணம் காவிரி அகலம் இருக்குமா?’’ என்று.  ஜானகிராமனுக்கு கங்கையும் காவிரி தான். சற்று பெரிய காவிரி. 

ஜானகிராமனின் கதாபாத்திரங்கள் காவிரியைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் நிறைவடைபவை.  வீட்டு வாசல்படியிலிருந்து எட்டு அடி எடுத்து வைத்தால் இருக்கும் காவிரியை திண்ணையில் அமர்ந்தே பார்த்துக் கொண்டே இருப்பவர் குஞ்சு. இந்த கதையில் ஒரு வரி வரும் . மதியத்தில் காவிரியும் தூங்கிக் கொண்டே நடந்து சென்றது என்று. 

கதைசொல்லிக்கு தாய் மீது தாளாத பாசம். கதைசொல்லியின் அன்னை வாசலுக்கு மிக அருகில் இருக்கும் காவிரியில் தினமும் பலமுறை மூழ்கி எழுவதில் பெரும் பிரியம் கொண்டவள். 

கதைசொல்லி மாயூரநாத சுவாமி துலா ஸ்நானத்துக்கு மாயூரம் வந்திருந்த போது அந்த ஊரிலிருந்த அவரது நண்பரும் நண்பர் மனைவியும் மிகச் சிறப்பாக வரவேற்று உபசரிக்கிறார்கள். அன்ன தாதாவாக அவரது நண்பர் விளங்கியிருப்பதைக் காண்கிறார் கதைசொல்லி. அத்தனை சிறப்பாக வாழ்ந்தவர் முற்றும் விளங்கிக் கொள்ள முடியாத வாழ்வின் மாயம் ஒன்றால் தன் உடைமைகள் அனைத்தையும் இழக்கிறார். 

அவரது மகன் பல வருடங்கள் கழித்து கதைசொல்லியைக் காண வருகிறான். தன் அன்னை உடல்நலமில்லாமல் இருக்கிறாள் என்று கூறி கதைசொல்லியிடமிருந்து மருத்துவ செலவுக்கு என ஒரு தொகையைப் பெற்று செல்கிறான். வறுமை அவனை அவ்வாறு கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதை வித்தியாசமான அனுபவம் ஒன்றின் மூலம் புரிந்து கொள்கிறார் கதைசொல்லி.