Monday 14 November 2022

பிரியமும் அன்பும் நட்பும்

’’காவிரி போற்றுதும்’’ தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் உடன் என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்வது எனது வழக்கம். வலைப்பூவின் வாசகர்கள் அதனை அறிவார்கள். எனினும் 14 மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான விஷயத்தைப் பதிவு செய்யாமல் இருந்தேன். ஒரே நேரத்தில் ஒரு வீதியில் இருக்கும் 14 மரங்களும் வெட்டப்படுவது என்பது வாசிக்கும் எவருக்கும் - கேள்விப்படும் எவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும் செயல் என்பதால் அது குறித்தும் மேலும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எந்த பதிவும் இடாமல் இருந்தேன். 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் ஒரு முக்கியக் கட்டத்தை அடைந்த போது இது குறித்து பதிவு செய்யப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். பதிவு செய்தேன். நண்பர்கள் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். இதனால் விஷயம் பலருடைய கவனத்துக்குச் சென்றது. நண்பர்கள் பலர் இந்த விஷயத்தை உள்வாங்கிக் கொண்டனர். என்னுடைய நகர்வுகளின் அடிப்படையைப் புரிந்து கொண்டனர். இந்த விஷயத்தை எப்படி மேலும் திறனுடன் கையாள்வது என்பதில் ஆலோசனை அளித்தனர். எப்போதும் உணர்வுபூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் உடனிருப்போம் என உறுதி அளித்தனர். இத்தனை நாள் ஏன் இது  குறித்து தெரிவிக்காமல் இருந்தேன் என கடிந்து கொண்டனர். இப்போது தெரிவித்தது மூலம் நான் ஒரு நிம்மதியை உணர்ந்தேன். இனி வரும் நாட்களில் எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட ஏன் அவ்வாறு நடந்தது என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். எதிர்பாராத சம்பவம் ஏதேனும் நடந்து அதன் பின்னர் 14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயம் குறித்து என் நண்பர்கள் அறிய நேர்ந்தால் என் நண்பர்களின் மனம் வருந்தும். நட்பில் நான் இடைவெளியுடன் இருந்து விட்டேனோ என்று அவர்கள் எண்ணக் கூடும். அது அவர்களுக்கு மேலும் வருத்தத்தைத் தரும் என்பதால் தான் பதிவு செய்தேன். 

நண்பர்கள்  பிரியத்தாலும் அன்பாலும் நட்பாலும் என்னைச் சூழ்ந்து விட்டனர். அவர்களின் நட்பும் பிரியமும் அன்பும் என்னை நெகிழச் செய்கிறது. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையாலும் அன்பாலும் பிரியத்தாலும் என்னைக் கடனாளியாக உணரச் செய்து விட்டனர். 

அனைவருக்கும் என் நன்றி !