Friday 25 November 2022

மாற்றல்

முக்கியமான இந்தியப் படைப்பாளிகளின் படைப்புகளில் சர்க்கார் இயங்குமுறை ஒரு பேசுபொருளாக இருப்பதைக் காணலாம். அனேகமாக எல்லா படைப்பாளிகளுமே சர்க்கார் அலுவலகங்கள் குறித்து சர்க்காருக்கும் மக்களுக்குமான சமூக உறவு குறித்து தங்கள் நாவல்களிலோ சிறுகதைகளிலோ எழுதியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ஒவ்வொரு கீழடுக்கு அலுவலகமும் கூட ஒரு தர்பாராக தம்மை எண்ணிக் கொண்டு செயல்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்ட நம் நாட்டில் அது மிக இயல்பாக நடந்திருக்கிறது. சிறு அதிகாரம் கொண்ட அதிகாரிகள் கூட தங்களை சிற்றரசர்களாக எண்ணிக் கொண்டனர். இன்று வரை கூட அந்த மனநிலை கணிசமான அளவு நீடிக்கிறது.   

வெங்கடியா பிள்ளை ஒரு ஆக்கபூர்வமான சக்தி. ஆசிரியராக அப்பாமங்கலத்தில் பணியாற்றுகிறார். தனது செயல்களால் பள்ளிக்கும் பள்ளி இருக்கும் ஊருக்கும் பல நற்பயன்களை உருவாக்குகிறார். பதினோரு வருடம் அந்த பள்ளியில் பணியாற்றிய அவருக்கு மாற்றல் உத்தரவு வருகிறது. ஊர்ப் பொதுமக்கள் பிரிவுபச்சார விருந்து நடத்துகிறார்கள். அதில் ஒருவர் இந்த மாற்றல் உத்தரவை நீக்கம் செய்ய மேலிடத்தில் முயற்சி செய்கிறேன் என்கிறார். முயற்சி நடக்கிறது. 

மாற்றல் உத்தரவு  நீக்கம் பெறுகிறது. உத்தரவு நீக்கத்திற்கான முழுக் காரணத்தையும் வெங்கடியா பிள்ளை அறிகிறார். அந்த இடத்தில் ஒரு கதைத்திருப்பத்தை நிகழ்த்தி ‘’மாற்றல்’’ கதையை சிறுகதையாக்குகிறார் தி. ஜா.