Wednesday 22 February 2023

நாற்றங்கால்

’’காவிரி போற்றுதும்’’ சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய ஒரு நர்சரி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. நடைமுறைத் தேவையே அந்த எண்ணத்தை எழுப்பியது. நாம் நிறைய விதங்களில் நிறைய மரக்கன்றுகளை நிறைய கிராமங்களில் நட விரும்புகிறோம். அத்தனை மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்து கொள்வதே ஆகச் சிறந்த சிக்கன வழிமுறையாக இருக்கும். நாம் நுண் அமைப்பு என்பதால் நம்மிடம் பொருளியல் இருப்பு போதுமானதாக இல்லை. எனினும் நாம் பெரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம் ; மெல்ல உறுதியாக நாம் சாதிக்கவும் செய்கிறோம். 

மரக்கன்றுகளை விதையிட்டு சிறு செடிகளாக வளர்க்க நமக்கு குறைந்தபட்சம் பிளாஸ்டிக் பைகள் தேவை. நர்சரிகளுக்கான பிளாஸ்டிக் பைகள் ஒரு பை இரண்டு ரூபாய் என்ற கணக்குக்கு வருகிறது. நாம் முதல்கட்டமாக பத்தாயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய உள்ளோம். எனவே பழைய இரும்புக் கடையில் சொல்லி அங்கு வரும் பால்பாக்கெட் கவர்களை எடுத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டோம். முதல் கட்டமாக கணிசமான எண்ணிக்கையில் கவர்கள் கிடைத்துள்ளன. இதனால் கவர் செலவில் 90% மிச்சமாகிறது. 

கயிறு மண்டியில் இருக்கும் தென்னைக்கழிவுகளின் தூளை மக்கிய சாண எருவுடன் சேர்த்து அந்த பால்பாக்கெட் கவர்களில் இட வேண்டும். கயிறு மண்டியில் தென்னை நார்த்தூளைப் பார்வையிட்டு வந்தேன். ஓரிரு நாளில் அவற்றை எடுத்து வர வேண்டும். 

புங்கன் விதைகளை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கிறோம். கூடிய விரைவில் கிடைத்து விடும் . அந்த விதைகளை நாம் தயாரித்திருக்கும் பைகளில் இட்டு நீர் வார்த்து வர 48 நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள் விதைகள் முளைத்து நல்ல உயரம் வரும். 

ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அதிக அளவில் மரக்கன்றுகளைக் கேட்டிருக்கிறார்கள். 

புங்கன் செடியை மரத்தை ஆடு மாடு மேயாது என்பதால் அவற்றுக்கு வேலி தேவையில்லை. நீர் வார்த்தால் மட்டும் போதும்.