Saturday 25 February 2023

நேரம்

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இன்றி பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விஷயத்தில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்ற மாதம் கடைசி வாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியிருந்தேன். மனு அனுப்பி ஒரு மாத காலம் ஆயிற்று.  மூன்று நாட்களுக்கு முன்னால், மாவட்ட வருவாய் அதிகாரி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் இந்த விஷயம் குறித்து ஒரு அறிக்கை அளிக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி வருவாய் கோட்டாட்சியரிடம் கோரியிருந்தார். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதும் தவறிழைத்தவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் கோரிக்கைகள். மாவட்ட ஆட்சியருக்கு மனுவை அனுப்பி அதன் நகலை மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் அனுப்பியிருந்தேன். 

சமீபத்தில் மேஜையை சரி செய்ததில் அந்த மனு நகலில் மூன்று அதிகாரிகளுக்கும் அனுப்பிய பதிவுத் தபாலின் ரசீது ஒட்டப்படாமல் இருந்ததை கவனித்தேன். மரம் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் ஆகிறது. இந்த விஷயத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு கொண்டு செல்லலாம் என இருக்கிறேன். அவ்வாறெனில் அந்த ரசீதுகள் மனுவில் ஒட்டப்பட்டு நகல் எடுக்க வேண்டும். ரசீதுகள் அளவில் சிறியதாக இருக்கும். மேஜை டிராயரில் பார்த்தேன். கண்ணில் படவில்லை. மேஜையை சரி செய்ததால் விடுபடலாக மேஜையை விட்டு வெளியேறிவிட்டதா என்று எனக்கு ஐயம். புதிதாக ஒரு மனு எழுதினால் மேலும் நாளாகுமே என சஞ்சலம். அஞ்சலகத்தில் தபால் அனுப்பிய தேதியை சொன்னால் அந்த ரசீது எண்ணைப் பெற்றிட முடியும் . அதனை அஞ்சல் துறையின் இணையதளத்தில் உள்ளிட்டால் பதிவுத் தபால் அனுப்பிய விபரம் கிடைக்கும். நான் மூன்று அஞ்சலகங்கள் மூலம் வழக்கமாக மனுக்களை அனுப்புவேன். அதில் எந்த அஞ்சலகம் என்று உறுதியாகத் தெரியவில்லை. தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தது. மூன்று முறை மேஜை டிராயரில் தேடியாகி விட்டது. இருப்பினும் நான்காவது முறை தேடினேன். அந்த மூன்று ரசீதுகளும் கண்ணில் தென்பட்டன. தவறிழைத்தவர்களின் ‘’நேரம்’’ அவர்களுக்கு சாதகமாக இல்லை. வேறென்ன?