Thursday 16 February 2023

அறச்செயல்

தமிழகத்தை - தமிழ் மக்களைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். அதாவது, தமிழ் சாமானிய மனநிலையில் தனது மன எல்லைகளைக் குறுக்கிக் கொள்ளுதல் என்னும்  பழக்கம் உண்டு. அந்த குறுகிய எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள் மிகவும் குறைவு. எதிர்பாராமல் கடக்க நேர்ந்தால் கூட அச்சத்தால் பீடிக்கப்படுவர்களே இங்கு மிகுதி. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் உருவான பஞ்சம் தமிழ் மக்களின் மனத்தில் இவ்வாறான ஒரு மனோபாவத்தை உண்டாக்கியிருக்கக் கூடும் என நம்புவதற்கு அதிக  முகாந்திரங்கள் இருக்கின்றன. 

19ம் நூற்றாண்டின் இறுதியில் உருவான உணவுப் பஞ்சம் தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தையும் - குறிப்பாக வட தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாக பாதித்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம். கோடிக்கணக்கில் மக்கள் பஞ்சத்தில் செத்தனர். அந்த பஞ்சம் மக்களின் அகத்தில் குடும்பங்களின் அகங்களில் அச்சமாகக் குடியேறியது. பிழைத்தல் என்பது தன் குடும்பம் உணவுப் பஞ்சம் இல்லாமல் இருத்தல் என்னும் நிலை என மக்களை எண்ண வைத்தது. 

ஒரு புறம் இந்தியாவின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. ( சோழப் பேரரசு, விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் அரசு) . இன்னொரு புறம் பஞ்சம் உருவாக்கிய அச்சத்தால் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கும் சமூகம். தமிழ்ச் சமூகத்துக்கு இந்த இரண்டு எல்லைகளும் உள்ளன. 

தமிழகத்தின் மக்கள் பலவிதங்களில் இணைக்கப்பட வேண்டியவர்கள். பலவிதமான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியவர்கள். குறிப்பாக தமிழக விவசாயிகள் வெவ்வேறு விதமான விவசாயம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க பயிற்றுவிக்கப்பட வேண்டியவர்கள். 

விவசாயிகள் வெவ்வேறு விவசாயம் சார்ந்த உற்பத்தி மூலம் பயனடைவதற்கு அவர்களுக்கு உதவுவது மிகப் பெரிய அறச்செயல். விவசாயியின் அகம் மகிழ்ந்தால் மனம் நம்பிக்கை கொண்டால் அவன் பெரும் செயல்களை ஆற்றுவான். அவ்வாறு ஆற்றியதற்கு உதாரணமே சோழப் பேரரசும் விஜயநகரப் பேரரசும்.