Tuesday 14 March 2023

அனுபவம்

ஞாயிறன்று எனது நண்பரின் மகளுக்கு கும்பகோணத்தில் வங்கிப் பணித் தேர்வு இருந்தது. ஊரிலிருந்து இருவரும் காரில் செல்வதாய் திட்டமிட்டிருந்தனர். நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். முன்னர் அந்த நண்பர் ஊரிலேயே பணியில் இருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு முறை சந்திப்போம். பின்னர் அவருக்கு பணி மாற்றல் ஆகி விட்டது. மாதம் ஒருமுறை மட்டுமே அவரால் ஊருக்கு வர முடியும் என்ற நிலை. எனவே மாதக்கணக்கில் சந்திக்க இயலாத சூழல். எனவே கும்பகோணம் பயண நேரத்தையும் தேர்வு நேரத்தையும் நாங்கள் இருவரும் உரையாடப் பயன்படுத்தலாம் என்பதால் அவ்விதம் திட்டமிட்டோம்.  

நண்பரின் மகள் பொறியியல் பட்டதாரி. பொறியியல் கல்வி முடித்து இரண்டு ஆண்டுகளாக வங்கித் தேர்வுகள் எழுதி வருகிறார். நான் நண்பரிடம் மகளை சென்னையில் இருக்கும் பயிற்சி மையம் ஒன்றில் இணைந்து வங்கித் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள அறிவுறுத்துமாறு கூறினேன். நண்பர் என்னை பேசச் சொன்னார். அது எப்போதும் வழக்கம். நான் ஒரு ஆலோசனை சொன்னால் அதைச் செயலாக்கும் பொறுப்பையும் எனக்கே தருவார்கள். 

நான் அடிக்கடி சொல்லும் வழக்கமான ஒரு உண்மைக் கதையைச் சொன்னேன். வங்கித் தேர்வுக்கு தயார் செய்யும் ஒரு மாணவிக்கு சொன்ன கதை என்பதால் வங்கித் தேர்வு வினாக்கள் முறையில் கதை சொன்னேன். 

A, B, C என்று மூன்று பேர். இதில் ஏ க்கு பியைத் தெரியும் . சியைத் தெரியாது. சிக்கு ஏயைத் தெரியாது; பியைத் தெரியும். பிக்கு ஏ சி இருவரையும் தெரியும். பி தரங்கம்பாடி கடற்கரையில் ஏ பி சி மூவரும் சந்திக்கும் விதமாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். மூவரும் அங்கே சந்தித்தனர். சந்திப்பில் ஏ சில நவீன தமிழ்க் கவிதைகளை தன் நினைவிலிருந்தே கூற, அதில் வியப்படைந்த சி ஏக்கு மிக அருகில் வந்து அமர்ந்து கொண்டார். நெடு நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு மூவரும் புறப்பட்டனர். அப்போது ஏயும் சியும் ஒரே மோட்டார்சைக்கிளில் பயணித்தனர்.  அந்த கடற்கரை உரையாடலில் சி தனது இலக்கிய வாசிப்பு குறித்தும் இலக்கிய ஆர்வம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்திருந்தார். 

பைக்கில் செல்லும் போது ஏ சி யிடம் சொன்னார். ‘’தம்பி ! நீ சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்றேன்னு சொல்ற. ஆனா உன்னோட மன அமைப்பு ரொம்ப எமோஷனலா இருக்கு. நீ எந்த விஷயத்தையும் ரொம்ப உணர்ச்சிகரமா அணுகற. அது நல்ல விஷயம் தான். ஆனா சிவில் சர்வீஸ் பிரிபரேஷனுக்கு ஒரு மெக்கானிக்கல் மைண்ட் செட் வேணும். அது மினிமம் அளவுலயாவது இருக்கணும். உனக்கு அது வருமான்னு எனக்குத் தெரியல். நீ ஒன்னு பண்ணு. சிவில் சர்வீஸ் பிரிபரேஷனை விட்டுடு. பேங்க் எக்ஸாம் பிரிபேர் பண்ணு. உன்னோட இங்கிலீஷ் ஃபவுண்டேஷன் ஸ்ட்ராங்கா இருக்கு. எஞ்சினியரிங் படிச்சிருக்கறதால மேத்தமேடிக்ஸ் உனக்கு வரும். சிவில் சர்வீஸுக்கு பிரிப்பேர் பண்ணதால் கரண்ட் அஃபையர்ஸ் நல்ல டச்ல இருக்கும். சின்சியரா ஒரு வருஷம் பிரிப்பேர் பண்ணு. நீ பேங்க் மேனேஜரா ஆயிடலாம் ‘’

சி மௌனமாக இருந்தார். 

ஏ சி யிடம் ‘’நீ எந்த ஊருக்குப் போனாலும் உன்னோட வீட்டு வாடகையை பேங்க் கொடுத்துடும். நாலு பர்செண்ட் இண்ட்ரஸ்ட்ல ஹோம் லோன் கிடைக்கும். அதே இண்ட்ரஸ்ட்ல கார் லோன் கிடைக்கும். யங் ஏஜ்ல மேனேஜரா ஆயிட்டன்னா பேங்க் சேர்மேனா கூட நீ ஆகலாம். ‘’என்றார். 

சி க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

‘’யார் இந்த மனிதன்? இந்த மனிதனைச் சந்தித்து இன்னும் ஆறு மணி நேரம் கூட ஆகவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இவன் யார் கூறுவது? ஆனால் இவன் கூறுபவை யதார்த்தமாகத்தான் உள்ளன. ‘’ மௌனமாக சி யின் யோசனைகள் ஓடின. 

ஏ ‘’ நீ இப்பவே முடிவெடுக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல தம்பி. ஒரு மூணு நாள் டைம் எடுத்துட்டு யோசிச்சு நிதானமா முடிவு பண்ணு’’ 

மூன்று நாட்களில் சி குடிமைப் பணித் தேர்வுக்கான தயாரித்தலை நிறுத்துவது என்றும் வங்கிப் பணிக்குத் தேர்வு எழுதுவது என்றும் முடிவு செய்தார். சென்னை சென்று பயிற்சி பெற வேண்டும் என்று ஏ கட்டாயப்படுத்த அதற்கும் உடன்பட்டார். 

எண்ணி 365 நாட்கள். சி க்கு மூன்று வங்கிகளில் மேலாளர் பணி கிடைத்தது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியின் கிளை ஒன்றில் மேலாளராகப் பதவி ஏற்றார். 

இந்த கதையில் ஏ நான். சி எனது நண்பன். இப்போது வங்கி மேலாளர் என்று சொன்னேன்.

நண்பரின் மகளுக்கு ஒரே உற்சாகம். தான் தேர்வு எழுதி பாஸாகி வங்கி மேலாளராக ஆகி விட்டதாக ஒரு உணர்வு. 

நண்பர் மகளிடம் சென்னை சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினேன். அங்கே பயிற்சி நிறுவனத்தில் தேர்வுக்கு தயார் செய்யும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பார்கள். அவர்களைத் தினமும் காணும் போது அவர்களுடன் பயிற்சி பெறும் போது நமது திறன் இயல்பாகவே கூர்மை பெறும் என்று சொன்னேன். 

ஊரிலிருந்து கும்பகோணம் செல்லும் வரை இந்த கதையைக் கூறினேன். தேர்வு மையம் ஒரு பொறியியல் கல்லூரி. நானும் நண்பரும் நண்பரின் மகளை தேர்வு எழுத அனுப்பி விட்டு மைதானத்தில் இருந்த அரச மரத்தின் நிழலில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தோம். பல அணிகளாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஒரு தம்பதி தமது மகளுடன் அப்போது தான் உள்ளே நுழைந்தனர். மகள் தேர்வு எழுத வந்திருக்கிறார். அவரது தேர்வு நேரம் பிற்பகலில். முதல் முறையாக தேர்வு எழுதுகிறார் என்பதால் கல்லூரியில் தேர்வு மையம் எங்கே என்பதை அவர் அறியவில்லை. அந்த இடத்தை சுட்டிக் காட்டிய போது அவர்கள் என்ன ஊர் என்று கேட்டேன். புதுக்கோட்டை என்று கூறினர். என்ன படித்திருக்கிறார் என்று கேட்டேன். ‘’எம். எஸ்ஸி மேத்தமடிக்ஸ்’’ என்றார். 

‘’பொதுவாவே மேத்தமெடிக்ஸ் படிக்க ஸ்டூடண்ட்ஸ் தயங்குவாங்க. நீங்க விருப்பமா மேத்தமெடிக்ஸ் எடுத்து படிச்சிருக்கீங்க. இந்தியாவில அண்டர்கிராஜுவேஷன் 100 பேர் படிச்சா போஸ்ட் கிராஜூவேஷன் 10 பேர் தான் படிக்கறாங்க. நீங்க எம்.எஸ்ஸி மேத்தமெடிக்ஸ் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு பேங்க் எக்ஸாம்ல மேத்ஸ் ஒரு விஷயமே இல்லை. இங்கிலீஷ் மட்டும் பிரிப்பேர் பண்ணுங்க. என்னோட அட்வைஸ் சென்னைல பயிற்சி எடுத்துக்கங்க. உங்களால முடியும். தயங்காதீங்க. முடியுமான்னு யோசிக்காதீங்க. டவுண்ல இருந்து வந்ததால நமக்கு விஷயம் தெரியுமான்னு யோசிக்காதீங்க. உங்களுக்கு உண்மையிலயே நிறைய விஷயம் தெரியும். நீங்க நினைக்கற அளவை விட அதிகமாவே உங்களுக்குத் தெரியும். எல்லாம் சப் கான்ஷியஸ் உள்ள இருக்கு. அத கான்ஷியஸ்க்கு கொண்டு வரணும் அவ்வளவுதான்’’ என்று சொன்னேன். 

ஏ பி சி கதையையும் சொன்னேன். 

உண்மையில் புதுக்கோட்டை குடும்பம் மட்டுமல்ல அந்த மைதானத்தில் இருந்த எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் அந்த கதையைக் கேட்டார்கள் என்பதை நான் பேசி முடிந்ததும் உணர்ந்தேன். 

அந்த மாணவியும் ஊக்கம் பெற்று தேர்வு மையம் நோக்கிச் சென்றார். 

இன்று காலை வங்கி மேலாளரான நண்பன் அலைபேசியில் அழைத்தான். 

‘’அண்ணன் ! உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ‘’

‘’சொல்லுப்பா! என்ன விஷயம் ?’’

‘’ரிசர்வ் பேங்க் எக்ஸாம் பிரிப்பேர் பண்ணிட்டி இருக்கன் அண்ணன்.’’

‘’வாவ். சூப்பர். கிரேட்’’

‘’ஹெவி பிரிபரேஷன்ஸ். காலை நாலு மணிக்கு எழுந்திருச்சு ஏழு மணி வரைக்கும். அப்புறம் ஈவினிங் பேங்க் விட்டு வந்தா நைட் எட்டு மணியிலிருந்து 11 மணி வரைக்கும் மூணு மணி நேரம். தினமும் ஆறு மணி நேரத்துக்குக் குறையாம அண்ணன். ‘’

‘’பிரிபரேஷன் எத்தனை நாளா போகுது?’’

‘’ரெண்டு மாசமா’’ 

‘’நோட்டிஃபிகேஷன் எப்ப வந்தது?’’

‘’இன்னும் வரல. ஒரு மாசம் ஆகும்’’

‘’தம்பி ! நோட்டிஃபிகேஷன் வர்ரதுக்கு முன்னாடியே பிரிபரேஷன் ஆரம்பிச்சிட்ட. சக்ஸஸ் உறுதி தம்பி.’’

நண்பன் ரிசர்வ் வங்கித் தேர்வில் வெல்வான்.