Friday 17 March 2023

உலா

இன்று தஞ்சாவூர் அருகில் உள்ள ‘’காவிரி போற்றுதும்’’ வழிகாட்டுதலில் தேக்கு பயிரிட்டிருக்கும் நண்பரின் நிலத்துக்குச் சென்று மரக்கன்றுகளைப் பார்வையிட்டு வர வேண்டும் என விரும்பினேன். காலையில் இங்கே எனக்கு ஒரு லௌகிகப் பணி. செய்ய முயன்ற போது நாளைக்கு ஒத்திப் போனது. காலை 10 மணி அளவில் புறப்பட்டேன். பேருந்துப் பயணம் மேற்கொள்ள விரும்பினேன். பேருந்துப் பயணம் சக குடிமக்களைக் குறித்து மேலும் அறிய மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. எனவே அவ்வப்போது பேருந்துப் பயணம் செய்ய விருப்பப்படுவேன். 

பேருந்து நிலையம் சென்ற போது கண்ணெதிரில் நான் பார்த்த பேருந்து புறப்பட்டுச் சென்று விட்டது. அடுத்த பேருந்தில் சென்று அமர்ந்தேன். பேருந்து மெல்ல சென்று கொண்டிருந்தது. சிறு வயதில் பேருந்து செல்லும் சாலையில் ஊர்களும் மக்களும் முடிவில்லாமல் பெருகி வரும் விந்தையை ஆர்வத்துடன் எண்ணியதுண்டு. இப்போதும் அந்த விந்தை தொடர்கிறது. 

கும்பகோணத்திலிருந்து ஒரு நகரப் பேருந்தில் பயணமானேன். அந்த பேருந்தின் நடத்துநர் பழக்கமானார். அவர் தன் கதையை என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார். அவருடைய சொந்த ஊர் திருப்பூந்துருத்தி என்று சொன்னார். அந்த ஊர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் நேரில் சென்றதில்லை. முன்னர் எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, ஏதேனும் ஒரு ஊர் குறித்து கேள்விப்பட்டால் அதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என எண்ணுவேன். இப்போதும் அந்த பழக்கம் தொடர்கிறது. இன்னும் ஓரிரு நாளில் திருப்பூந்துருத்தி செல்லக் கூடும். 

சிறு சிறு கிராமங்கள் வழியே பேருந்து சென்று கொண்டிருந்தது. ஒரு முதியவர் இரு சைக்கிள் சக்கரங்களை குடந்தையில் வாங்கி கையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணித்தார். ஒரு பெண்மணி தாராசுரத்தில் வாங்கிய காய்கறிகளை கையில் வைத்திருந்தார். சிறு சிறு காட்சிகள். அவை அனேக விஷயங்களை உணர்த்துகின்றன. 

நண்பருடைய வயலுக்கு சென்றேன். வயலின் மேற்பார்வையாளர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அழைத்துச் சென்றார். மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் பாய்ச்சப்பட்டிருப்பதால் பசுமையாக செழுமையாக வளர்ந்திருந்தன. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வயலின் உரிமையாளரான நண்பர் சென்னையில் இருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்து எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். 

ஊரிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள முக்கூட்டு ஒன்றில் வயலின் மேற்பார்வையாளர் கொண்டு வந்து விட்டார். சில நிமிடங்கள் பேருந்துக்காகக் காத்திருந்த போது ஒரு ஆட்டோ வந்தது. என்னையும் பேருந்துக்காகக் காத்திருந்த மேலும் 3 பயணிகளையும் ஆட்டோகாரர் ஏற்றிக் கொண்டார். அவர் ஐந்து கி.மீ தூரத்தை ரூ.20 பெற்றுக் கொண்டு அழைத்துச் சென்றார். அங்கிருந்து ஒரு நகரப் பேருந்தைப் பிடித்து கும்பகோணம். அங்கிருந்து ஊர் திரும்பல்.