Thursday 30 March 2023

வசந்தத்தின் அழைப்பு

கோடை என்னால் மிகவும் விரும்பப்படும் பருவநிலை. எனக்கு எல்லா பருவநிலைகளும் பிடிக்கும். தமிழகத்தின் பெரும் பகுதிகளில் வருடத்தின் கணிசமான நாட்கள் வெயில் நிறைந்திருக்கும் தன்மை கொண்டவை. மழைக்காலத்தில் கூட நான்கு நாட்கள் மழை பெய்தால் மூன்று நாட்கள் வெயில் என்ற கணக்கில் சுழற்சி இருக்கும். தஞ்சை வடிநிலம் பூம்புகார் தொடங்கி திருச்சிராப்பள்ளி வரை வெயிலுக்குப் பெயர் போனது. கோடைக்காலத்தில் உக்கிர்மான சூரியக்கதிர்கள் புறக்காட்சிகளை மிகத் துல்லியமாக ஆக்குகின்றன. கோடையின் பெரும் பரப்பில் வான் நோக்கி உயர்ந்திருக்கும் பசுமை கொண்ட மரங்களும் அவற்றின் காற்றில் பறக்கும் சருகுகளும் என்னை பெருமகிழ்வு கொள்ளச் செய்பவை. வசந்தம் கோடையில் தான் வருகிறது. அப்போது தான் மரங்கள் தளிர்க்கின்றன. பூக்கள் பூக்கின்றன. மாலையில் தென்றல் வீசுகின்றது. 

கோடை வந்து விட்டால் எனக்கு உடனே மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றும். காலையில் புறப்பட்டால் பொழுது செல்ல செல்ல வெயில் உக்கிரம் பெற பெற எனது ஆற்றல் கூடிக் கொண்டே செல்லும். நான் கூறுவது உண்மை. கோடையில் எனது ஆற்றல் பயணத்தின் போது அதிகபட்சமாக இருக்கும். அதிக வெயில் நமது ஆற்றலை எடுத்துக் கொள்ளும் என்று பொதுவாக எண்ணுவார்கள். காயும் வெயிலிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்தால் அது மனதுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்து விடும். பாதை எந்த தடைகளும் இல்லாமல் நம் முன் விரிந்து கிடக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கும். 

இந்திய நிலப்பகுதிகளின் உக்கிரமான கோடைக்காலத்தை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். இந்த முறை ஆந்திரா தெலங்கானா ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களுக்கு இந்த கோடையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. எல்லாம் கூடி வர வேண்டும்.