Sunday 5 March 2023

மக்களுடன்

நண்பர் கடலூர் சீனு ‘’அன்னம்’’ சிறுகதையை வாசித்த பின் அதனைக் குறித்து தளத்தில் ஒரு பதிவை எழுதினேன். அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். மறுநாள் கடலூரில் புத்தகக் கண்காட்சி துவங்குவதாகவும் எனவே மறுநாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ கடலூர் வருமாறு கேட்டுக் கொண்டார்.  

ஊரிலிருந்து சிதம்பரம் 40 கி.மீ சிதம்பரத்திலிருந்து கடலூர் 50 கி.மீ. முன்னர் ஊரிலிருந்து சிதம்பரம் செல்ல ஒரு மணி நேரமும் அங்கிருந்து கடலூர் செல்ல ஒரு மணி நேரமும் என ஒரு கணக்கு உண்டு. அந்த இரண்டு மணி நேரம் இப்பொது மூன்றே கால் மணி நேரமாக ஆகி விட்டது. ரயிலில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் வீடு ஊரின் கிழக்குக் கோடி ரயில் நிலையம் ஊரின் மேற்கு கோடி. ரயில் நிலையம் சென்றடைவது ஒரு பெரும் பயணம் போல் இருக்கும்.

ஒரு நாள் அரை நாள் வெளியில் சென்றால் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் போது என்னுடைய இரு சக்கர வாகனத்தை வீட்டில் வைத்து விட்டு சென்று விடுவேன். குடும்பத்தினருக்கு எனது வாகனம் நிற்பதைப் பார்க்கும் போது நடந்து சென்று திரும்பும் தூரத்திற்கு மட்டும் நான் சென்றிருப்பதாகத் தோன்றும். எனவே வீட்டிலிருந்து பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்வேன். அவ்வாறு நடக்கையில் இந்த பாதையில் தான் தினமும் பள்ளிக்கு நடந்து சென்றேன் என்பதை நினைவுகூர்வேன். கடைவீதியைத் தாண்டி நடந்து கொண்டிருந்த போது அரசு விரைவுப் போக்குவரத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து எதிரில் வந்தது . வண்டியை நிறுத்தி ஏறிக் கொண்டேன். சீனு ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை பேருந்து தாண்டியதும் அலைபேசியில் அழைக்குமாறு சொன்னார். பேருந்து கடலூர் சென்றடைந்ததும் சீனு இணைந்து கொண்டார்.

புத்தகக் கண்காட்சி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. மஞ்சக்குப்பம் மைதானம் மிகப் பெரிய ஒன்று. புத்தகக் கண்காட்சி ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். காற்றோட்டம் மிகுந்த அரங்குகள். பெரிய அகலம் கொண்ட மையப் பாதை. மையப்பாதை முழுவதும் மின்விசிறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிநீருக்கான ஏற்பாடுகள் அரங்குக்கு வெளியே இருந்தது. பொதுவாகவே கடலூர் மாவட்டத்தினர் திருமண மண்டபங்களில் அலங்காரம் ஏற்பாடுகள் பூவேலைப்பாடுகள் ஆகியவற்றை மேற்கொள்வதில் வல்லவர்கள். நூறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடலூர் சிறை நூலகத்துக்கு புத்தகங்களை நன்கொடை அளிக்கும் விதமாக தமிழ்நாடு சிறைத்துறையால் கண்காட்சி வாயிலிலேயே  ஒரு நன்கொடைப் பெட்டி அமைக்கப்பட்டிருந்தது.

புத்தகக் கண்காட்சி முழுக்க சுற்றினோம். மக்கள் மெல்ல குழுமிக் கொண்டிருந்தனர். அ.லெ.நடராஜன் எழுதிய ‘’சுவாமி விவேகானந்தர் வரலாறு’’ என்னும் நூலை வாங்கினேன்.

மாலை ரயிலைப் பிடித்து ஊர் வந்து சேரலாம் என கடலூர் ரயில் நிலையம் வந்தோம். எதிர்பாராத அதிர்ச்சியாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் அந்த நேரத்துக்கு இருந்தது. நான் பயணிகள் வண்டி ஒன்றையே உத்தேசித்திருந்தேன். சீனுவுடன் பேசிக் கொண்டிந்தேன். சீனுவுடன் உரையாடுவது எப்போதுமே ஓர் இனிய அனுப்வம். புத்தக வாசிப்பைத் தாண்டி பல்வேறு விஷயங்களில் ஆர்வமும் ஈடுபாடும் அனுபவமும் கொண்டவர். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வட இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். அதன் பின் ஒரு ஹம்பி பயணம் இருப்பதாகச் சொன்னார்.

ரயிலில் நல்ல கூட்டம். அமர இடம் இல்லை. எனினும் வண்டி 40 நிமிடத்தில் சிதம்பரம் வந்து சேர்ந்தது. சிதம்பரத்தில் எங்கள் பெட்டியிலிருந்து பயணிகள் பலர் இறங்கினர். இடம் கணிசமாகக் காலியானது. சிதம்பரத்தில் ஓர் ஆந்திரக் குடும்பம் ஏறியது. எட்டு பேர் கொண்ட குடும்பம். விஜயவாடா அருகில் அவர்களுடைய சொந்த ஊர். தமிழ்நாட்டுக்கு ஷேத்ராடனம் செய்ய வந்துள்ளனர். முதலில் திருவண்ணாமலை. பின்னர் சிதம்பரம். அதன் பின் கும்பகோணம், ஸ்ரீரங்கம், மதுரை. அதற்கடுத்து இராமேஸ்வரம். எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் நான் பயணித்த ஆந்திராவின் ஊர்கள் குறித்து அவர்களிடம் சொன்னேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மொஹித் சாய். மொஹித் என்ற சொல்லின் பொருள் என்ன என்று கேட்டான். அவன் தன் அன்னையிடம் கேட்டான். அன்னை தன் அலைபேசியில் கூகுள் செய்து மொஹித் என்பதன் பொருள் அழகு, வசீகரம் என்று சொன்னார். மொஹித் அன்னையின் பெயர் கனகதுர்க்கா. விஜயவாடாவில் கோவில் கொண்டுள்ள தெய்வத்தின் பெயர். எட்டு பேர் குழுவில் ஒருவராயிருந்த மொஹித் பாட்டியின் பெயர் பத்மாவதி. திருப்பதி தாயாரின் பெயர். மொஹித் சுறுசுறுப்பு மிக்க அழகான சிறுவன். அவனது பெயரின் அர்த்தம் அறிந்து கொண்டதில் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி.

ரயில் சீர்காழி வந்ததும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் ரயில் நிலையம் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினார். இரு சக்கர வாகனம் எடுத்து வந்து வண்டி ஸ்டேண்டில் வைத்து விட்டுச் சென்றிருந்தால் ந்ண்பரை சிரமப்படுத்த வேண்டியிருக்காது.

மொஹித் குடும்பத்தினரிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தேன். இனிய உரையாடல். பிரிய மனமின்றி பிரியாவிடை கொடுத்தார்கள். மொஹித் மறக்க இயலாத ஒரு சிறுவன். அர்ஜூனன் இவ்வாறு தான் ஒரு சிறுவனாக இருந்திருப்பான். பீமன் இப்படித்தான் இருந்திருப்பான். அங்கதனும் அனுமனும் கூட இவனைப் போலவே இருந்திருப்பார்கள்.