Thursday 9 March 2023

ஏன்

நண்பர்கள் என்னிடம் ஓயாமல் வலியுறுத்தும் விஷயம் ஒன்று உண்டு. பொது விஷயங்களில் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் சட்டென ஈடுபட்டு விடுகிறேன் என்பது. நண்பர்களின் இந்த கூற்றை நான் ஆராய்ந்து பார்க்கிறேன். நண்பர்கள் நினைப்பது போல விளைவுகள் குறித்து சிந்திக்காமல் சட்டென ஈடுபடுவது இல்லை. ஒரு முறைக்கு பலமுறை யோசித்தே செயல்படுகிறேன். 

நமது ஜனநாயக அமைப்பில் உயர் அதிகாரம் படைத்தவர்கள் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமே இருக்கும். ஜனநாயக அமைப்பின் - அரசின் - ஊழியர்கள் நாடெங்கும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். நாட்டு மக்கள் அவர்களைத் தான் தினமும் சந்திக்கின்றனர். தங்கள் பணிகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். எண்ணிக்கையில் கோடிக்கணக்கில் இருக்கும் ஊழியர்களே நாட்டின் வரி வருமானத்தில் பெரும் பகுதியை தங்கள் ஊதியமாகப் பெறுகிறார்கள். அவர்கள் பணி ஒழுங்குடன் இருக்க வேண்டியதும் விதிமுறைக்கு உட்பட்டு நடக்க வேண்டியதும் மிக அவசியமான ஒன்று.

இன்று காலை நடந்த வங்கி விவகாரத்தில் , வங்கி ஊழியர்கள் ஆண்டுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருமானமாகப் பெறுகிறார்கள். அவ்வளவு தொகையை ஊதியமாகப் பெறும் ஒருவர் பின்பற்ற வேண்டிய மிகக் குறைந்தபட்ச தார்மீகம் என ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் போனதால் தான் இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்தேன். 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என்று பதிவில் தெரிவித்திருந்தேனே தவிர நாகரிகம் கருதி வங்கியின் பெயரைத் தெரிவிக்கவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவை தளத்தில் வெளியிட்ட போதும் வங்கியின் பெயரை ******** என்றே குறிப்பிட்டிருந்தேன். வங்கி மேலாளரிடம் புகாரைக் கூறினேன். வங்கியின் பிராந்திய அலுவலகத்துக்கும் புகாரைச் சொன்னேன். அளிக்கப்பட்ட பதில் திருப்தியாக இல்லை என்னும் போது தான் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். 

என்ன நடக்கும் ? மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு விஷயம் செல்லும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வங்கியின் பிராந்திய அலுவலகத்துக்கு ஃபோன் செய்து இவ்வாறான ஒரு புகார் வந்துள்ளது ; சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் எனக் கூறுவார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மேற்படி வங்கியின் மாவட்டத்தில் உள்ள பிற கிளைகளிலும் இந்த விஷயம் விவாதப் பொருளாக ஆகும். பலருடைய கவனம் இதில் விழுவதால் விதிமுறைகள் பின்பற்றப்பட ஒரு வாய்ப்பு உருவாகும். 

பொது விஷயங்களில் ஈடுபடும் தோறும் எனது நம்பிக்கை அதிகமாகிறதே தவிர குறைவது இல்லை.