Thursday 9 March 2023

மாவட்ட ஆட்சியருக்கு ஒரு விண்ணப்பம்

 அனுப்புநர்

*.***
*******
********
**********

பெறுநர்

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

********

ஐயா,

பொருள் : மயிலாடுதுறை *******வங்கி கிளையில் விவசாய நகைக்கடன் செலுத்தச் செல்லும் பொதுமக்களை வங்கி ஊழியர்கள் ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் செலுத்துமாறு கூறுவதையும் பொதுமக்கள் நகைக்கடன் கணக்கில் வரவு வைக்க கொண்டு வரும் பணத்தை சேமிப்புக் கணக்கில் வரவு வைக்குமாறு கூறுவதையும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு வருதல் - பொதுமக்கள் நகைக்கடன் செலுத்தி தங்கள் நகைகளை மீட்டுக் கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டு விண்ணப்பம்

இன்று காலை காசோலை ஒன்றை ரொக்கமாக மாற்ற மயிலாடுதுறை ****** *** க்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பித் தருமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கு உதவும் விதமாக படிவத்தில் விபரங்களை நிரப்பினேன். அப்போது அவர் ஒரு விஷயத்தைத் தெரிவித்தார். 

அதாவது, அவர் மேற்படி வங்கியில் பெற்ற விவசாய நகைக்கடனை வட்டியுடன் செலுத்தி நகையை மீட்டுச் செல்ல வந்திருக்கிறார். ஆனால், வங்கியின் ஊழியர்கள் ‘’ நிதி ஆண்டின் இறுதி மாதமாக இருக்கிறது ; எனவே நகைக்கடனில் நீங்கள் செலுத்தும் தொகையை வரவு வைக்க முடியாது ; தொகையை சேமிப்புக் கணக்கில் செலுத்தி விட்டு செல்லுங்கள். ஏப்ரல் 2ம் தேதிக்குப் பின்னர் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையை நகைக்கடன் கணக்குக்கு மாற்றி நகையை மீட்டுக் கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கின்றனர். மேலும் ‘’வங்கியில் தணிக்கை நடைபெறுகிறது ; எனவே இப்போது நகையை மீட்க முடியாது ‘’ என்றும் கூறியிருக்கின்றனர். 

வங்கி ஊழியர்கள் விவசாய நகைக்கடனை மீட்க வந்த வங்கி வாடிக்கையாளர்களிடம் அளித்துள்ள பதில் கீழ்க்காணும் வகைகளில் சட்ட மீறலும் விதிமீறலும் ஆகும். 

1. நகைக்கடன் பெற்றவர் நகைக்கடனை அடைக்க வங்கிக்கு வருவாரெனில் அவர் செலுத்தும் தொகையை நகைக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டியது வங்கி ஊழியர்களின் கடமை. அவர் தொகையை முழுமையாகச் செலுத்துவார் என்றால் வங்கி ஊழியர்கள் அவரது நகையை அவருக்குத் திருப்பித் தர வேண்டும். நகைக்கடன் கணக்கில் முழுத் தொகையை செலுத்தாமல் பகுதித் தொகையை செலுத்துவார் எனில் அவரது கடன் அசல் குறைந்து வட்டியும் குறையும். எனவே நகைக்கடன் கணக்கில் பணம் செலுத்த வந்த ஒரு வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று கணக்கில் வரவு வைக்காமல் ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் வந்து நகைக்கடன் கணக்கில் பணம் செலுத்துங்கள் என்று கூறுவது சட்டத்துக்கும் வங்கி விதிமுறைகளுக்கும் புறம்பானது. 

2. ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் பணம் செலுத்துங்கள் என்று கூறுவதால் 23 நாட்களுக்கான கூடுதல் வட்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த நேரிடும். இது வாடிக்கையாளர்களுக்கு பொருளியல் இழப்பை உண்டாக்கும் செயல். 

3. வங்கியில் தணிக்கை நடைபெறுவதற்கும் வங்கியின் வாடிக்கையாளர் தான் அடகு வைத்த நகையை திரும்பப் பெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தணிக்கை நடைபெறுவதால் நகையை அளிக்க முடியாது என்று கூறுவதும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மேல் அதனால் வரச் சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. 

4. நிதி ஆண்டு இறுதியில் வங்கியின் டெபாசிட் உயர்த்திக் காட்ட வேண்டும் எனில் வங்கி ஊழியர்கள் வங்கியின் வாடிக்கையாளர்களிடமும் பொதுமக்களிடமும் சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி டெபாசிட் பெற வேண்டுமே அன்றி நகைக்கடன் செலுத்த வந்தவர்களிடம் சேமிப்புக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யக் கூறுவது முறையானது அல்ல. 

5. இந்த விஷயம் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது வங்கியின் வாடிக்கையாளர்கள் மேலும் பலர் தங்களுக்கும் இதே பதில் அளிக்கப்பட்டதாகக் கூறினர். வங்கியின் மேலாளரை சந்தித்து ஊழியர்கள் அளித்த பதிலைக் கூறினோம். வங்கி மேலாளரும் அதே பதிலைக் கூறினார். 

6. இந்த மாதம் முழுதும் நகைக்கடன் மீட்க வரும் வாடிக்கையாளர்களிடம் இதே விதமான பதில் அளிக்கப்பட்டு அவர்கள் நகைக்கடனுக்காகக் கொண்டு வரும் தொகை வரவு வைக்கப்படாமல் போகும் எனில் ஒரு நாளைக்கு சராசரியாக பத்து வாடிக்கையாளர்கள் தங்கள் நகைக்கடனாக ரூ. 50,000 செலுத்த வந்து செலுத்த வாய்ப்பு மறுக்கப்பட்டு செல்வார்களேயாயின் அத்தொகை ஒருநாளைக்கு ரூ.5,00,000 ஆகும். இந்த மாதத்தின் 23 வங்கி வேலைநாட்களில் அத்தொகை ரூ. 1,15,00,000 ( ரூபாய் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ) ஆகும். 

அரசு எந்திரம் என்பது ஆயிரம் செவிகளும் ஆயிரம் விழிகளும் கொண்டது. அரசு எந்திரம் ஆயிரம் செவிகளும் ஆயிரம் விழிகளும் கொண்டது என்பதனாலேயே அது சமூக ஒழுங்கை நிலைநாட்டும் திறன் பெற்றுள்ளது. ஒரு இந்தியக் குடிமகனாக இந்த விஷயத்தை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். விவசாய நகைக்கடன், விவசாயிகள் தொடர்புடைய விஷயம் என்பதாலும். 

இது குறித்து விசாரித்து விபரம் கேட்டறிந்து மேற்படி வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ள விவசாயிகளும் பொதுமக்களும் வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் நகைக்கடனைச் செலுத்தி நகைகளைத் திரும்பப் பெற்றுச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்டத்துக்கு புறம்பாகவும் வங்கி விதிமுறைகளுக்குப் புறம்பாகவும் நடக்காமல் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் விவசாய நகைக்கடன் விஷயத்தில் சட்டத்தின் படியும் விதிமுறைகளின் படியும் நடப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

*****

இடம் : மயிலாடுதுறை
தேதி : 09.03.2023