Saturday 1 April 2023

25 ஆண்டுகளுக்குப் பின்

நேற்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடன் பள்ளியில் பயின்ற நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதாவது யூ-டியூபில் எனது உரை ஒன்றைக் கேட்டதாகவும் அதன் பின் எனது வலைப்பூவைக் கண்டடைந்ததாகவும் எழுதியிருந்தார். மின்னஞ்சலில் பெயரைக் கண்டதும் அவர் யாரென நினைவுக்கு வந்து விட்டது. மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினேன். ஊருக்கு வந்திருப்பதாகச் சொன்னார். அவருடைய இல்லம் எங்கே இருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இன்று காலை சந்திப்பதாகக் கூறினேன்.  

நாங்கள் 11ம் வகுப்பும் 12ம் வகுப்பும் ஒரே பள்ளியில் படித்தோம். வேறு வேறு வகுப்புகள். 12ம் வகுப்பு முடித்த பின் அவர் குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்று விட்டார் என்ற தகவல் அ|றிந்திருந்தேன். அதன் பின் 25 ஆண்டுகள் தொடர்பு இல்லை. மீண்டும் இப்போது தான் சந்திக்கிறோம். அவர்கள் தஞ்சாவூரில் ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு பின்னர் பெங்களூரில் பல ஆண்டுகள் வசித்து ஐந்து ஆண்டுகள் சென்னை வாசத்துக்குப் பின் சொந்த ஊரில் வீடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

’’சங்கிரகம்’’ என்ற தலைப்பில் வெளியான பதிவுகள் மூலம் நான் பொதுப் பணிகளில் ஈடுபட்டிருப்பது குறித்து அறிந்ததாகக் கூறி அச்செயல்களுக்கு தனது மகிழ்ச்சியை என்னிடம் தெரிவித்தார். ஒரு அமைப்பாக செயல்படுகிறீர்களா அமைப்பின் பெயர் என்ன என்று கேட்டார். 

‘காவிரி போற்றுதும்’’ என்று கூறினேன். 

அவர் சற்று யோசித்தார். நான் விளக்கம் கொடுத்தேன். 

‘’அதாவது , சிலப்பதிகாரம் ‘’திங்களைப் போற்றுதும்’’னு துவங்குது. திங்கள்னா நிலவு. இங்க நிலவு பெண்மையைக் குறிக்குது. சிலப்பதிகாரம் கண்ணகியோட சிறப்பை பேசுன நூல் தானே. மேலும் நீதி , அறம் ஆகிய விஷயங்களுக்கும் குறியீடா நிலவைச் சொல்றார். அதனால தான் திங்களைப் போற்றுதும்னு சிலப்பதிகாரத்தைத் துவங்குகிறார். நான் அதுல இருந்து போற்றுதும் ங்கற வார்த்தையை எடுத்துக்கிட்டன். அது முன்னாடி காவிரியை சேத்து ‘’காவிரி போற்றுதும்’’னு அமைப்புக்கு பேர் வச்சேன். ‘’ என்று சொன்னேன். 

நண்பரின் குடும்பத்தினர் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதைச் சொன்னார். குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன். 

‘’சந்திரா’’ என்றார்.