Thursday 13 April 2023

சுழற்சி

எனது இலக்கிய நண்பர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். அவரது பூர்வீகம் ஊருக்குப் பக்கத்தில். அங்கே அவரது வீடு இருக்கிறது. சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர் எனக்கு 20 ஆண்டுகளாக நண்பர். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் அவரை முதல் முறையாக சந்தித்தேன். சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை அந்த நட்பு தொடர்கிறது. நான் சந்தித்த போது அவருக்கு 50 வயது இருந்திருக்கும். எனக்கு அப்போது 22 வயது. இலக்கியம் வாசிப்பவர் என்பதால் வாசித்த புத்தகங்களைக் குறித்தும் இலக்கியப் படைப்பாளிகள் குறித்தும் உரையாடுவது வழக்கம்.  

எனக்கு இலக்கியத்துடன் கூட வரலாறு, சமூகவியல், பண்பாடு ஆகிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு. நான் எந்த விஷயத்தையும் வரலாற்றின் பெரும் பரப்பில் வைத்து மதிப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். இந்திய மரபு வகுத்தளித்திருக்கும் கருவிகளைத் துணையாகக் கொண்டு சிந்திப்பவன். 

அவருடைய சிந்தனை முறையும் வாழ்க்கை நோக்கும் ஐரோப்பிய அடிப்படை கொண்டது. 

எங்கள் இருவருக்கும் வேறு வேறு நோக்கு இருப்பினும் பரஸ்பரம் மிகுந்த அன்பும் பிரியமும் எங்களுக்குள் உண்டு. நான் பழகும் எல்லாரிடமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். 

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் மாலை நேரங்களில் இலக்கியம் பேசியவாறே காலாற உலவுவோம். அன்றைய தினம் என் மனதில் நிறைந்திருக்கும் விஷயம் குறித்து பேசுவேன். ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் ஏதோ ஒரு விஷயம் நிறைந்திருந்திருக்கிறது என்பதை இப்போதும் எண்ணிப் பார்த்தால் உணர முடிகிறது. 

சில நாட்கள் முன்னால் ஊருக்கு வந்திருந்தார். நண்பருக்கு இப்போது 70 வயது. உடலும் மனமும் சற்றே சோர்வுற்றிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது. 

‘’வாக்கிங் ஸ்டிக்’’ யூஸ் பண்ணுங்க சார்’’

‘’நடக்கும் போது சின்னதா ஒரு பேலன்ஸ் மிஸ் ஆகுது . அவ்வளவுதான். நடக்க முடியாத அளவு இன்னும் வயசாகலை’’ 

‘’சார் வாக்கிங் ஸ்டிக்குக்கும் வயசுக்கும் சம்பந்தம் இல்லை சார். உங்க உடம்பு எடையை கால்கள் முழுமையாக் பேலன்ஸ் செய்யலை. ஸ்டிக் யூஸ் பண்ணா உங்க உடம்பு வெயிட்டோட பெரும்பகுதியை கை வழியா ஸ்டிக்குக்குக் கடத்தி பூமிக்குக் கொண்டு போய்டுவீங்க. உங்களோட இயல்பான வேகம் உங்களுக்கு திரும்ப கிடைச்சுடும். இன்னும் வேகம் கூடக்கூட செய்யும்.’’

அவர் எனது நோக்கில் திருப்தியடையவில்லை. அவர் மனம் வாக்கிங் ஸ்டிக்கை வயதுடன் தொடர்புபடுத்தியே வைத்திருந்தது. 

வாசிப்பு சவாலில் ஆர்வமாக பங்கேற்று தினமும் நூல்களை வாசிப்பது குறித்து சொன்னேன் ; 20 ஆண்டுகளுக்கு முன் புத்தகங்கள் குறித்து பேசும் அதே உற்சாகத்துடன்.