Friday 14 April 2023

தொடக்கம்

இந்திய மரபு அறுபது ஆண்டுகள் என்பதை ஒரு வட்டம் என உருவகிக்கிறது. நிலவின் சூரியனின் இயக்கத்தை அவதானித்து அதன் படி அமைக்கப்பட்ட நாட்காட்டிகள் இந்திய நிலத்தில் சிறு சிறு வேறுபாடுகளுடன் அமைந்துள்ளன. யுகாதி, சித்திரை, வைசாகி ஆகிய புது வருடங்கள் ஒரே பருவத்தில் நிகழ்பவை. 

வாழ்க்கை ஒரு வட்டம். நாம் துவங்கிய இடத்துக்கு மீண்டும் ஒருமுறை வர வாய்ப்பு அமையும். தொடங்கிய இடத்துக்கு மீண்டும் வரும் போது நிறைவு இருக்குமாயின் அடுத்த சுற்று என்பதும் அடுத்தடுத்த சுற்றுக்கள் என்பவையும் இனிமையானவையே. துவங்கிய இடத்துக்கு மீண்டும் வரும் போது நிறைவின்மை எய்யப்படவில்லை எனில் நமது முயற்சிகளையும் உபாயங்களையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

நமது நாட்காட்டிகள் பிரபவ , விபவ, சுக்ல எனத் தொடங்கி ரக்தாட்சி , குரோதன, அட்சய என அறுபது ஆண்டுகளைக் கொண்டவை. 

ஒரு மானுடனுக்கு நல்முயற்சி இருக்குமெனில் அறுபது ஆண்டுகளில் சிறப்பான நிலையை அடைய முடியும். சிறப்பான நிலை என இங்கு குறிப்பிடப்படுவது திருப்தியான நிலையே. தீவிரமான முயற்சி இருக்குமென்றால் அறுபது ஆண்டுகளில் ஐந்தில் ஒரு பாகமான பன்னிரண்டு ஆண்டுகளிலேயே கூட அந்நிலையை எட்டி விட முடியும். 

இந்திய மரபின் கதைகளில் 12, 13, 14 ஆகிய ஆண்டுகள் சிறப்பிடம் பெறுபவை. மகாமகம் மற்றும் கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஒரு ஆண்டு அக்ஞாதவாசமும் என நாட்டை விட்டு வெளியேறி இருந்தனர். ரகுகுல ராமன் ஈரேழு பதினான்கு ஆண்டுகள் வனமேகினான். 

மானுடம் ஒட்டுமொத்தமாக நலம் பெறும் நாள் வரும் என்று என் மனதில் படுகிறது. 

இன்று காலை மயிலாடுதுறை வள்ளலார் கோவில் என்ற சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டேன். சிவன் தக்‌ஷணாமூர்த்தியாகிய அமர்ந்துள்ள தலங்களில் சிறப்பு வாய்ந்தது. பணிபவர்களுக்கு அருளை அள்ளி அள்ளி வழங்குபவர் என்பதால் இங்கு சிவன் வள்ளல் எனப்படுகிறார். வள்ளலார் என்று மேன்மையுடன் அழைக்கப்படுகிறார். 

மக்கள் காலையிலேயே புதிய ஆண்டுத் தொடக்கத்தை ஆலயத்தில் தீபமேற்றி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த சூழலில் அங்கிருந்தது நிறைவளித்தது.