Monday 17 April 2023

கள ஆய்வு

 இன்று செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். செல்லும் வழியில் பள்ளி சென்று திரும்பும் கிராமத்துச் சிறுவர்கள் ‘’லிஃப்ட்’’ கேட்டு வண்டியை நிறுத்தினர். மாலை நேரத்தில் அங்கு செல்லும் போது வீடு திரும்பும் சிறுவர்கள் எதிர்படுவார்கள். அவர்களை கிராமத்தில் கொண்டு சேர்ப்பேன். இந்த சிறுவர்களைப் பார்த்த போது கிராமத்துச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. எப்போதும் மனதில் இருக்கும் எண்ணம் தான். இருப்பினும் இந்த குழந்தைகளைக் காணும் போது அந்த எண்ணம் மேலும் வலிமை அடைந்தது. நல்ல திட்டம். உபயோகமான திட்டம் . என்றாலும் பட்ஜெட் ‘’ஹெவி’’. நிதிப் பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளது. 

கிராமவாசி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்னை சென்று மருத்துவம் பார்த்து திரும்பியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க விரும்பினேன். வயதில் மூத்தவர். ஜூரம் என்று ஒரு மருத்துவரைக் காண சென்றிருக்கிறார். அவர் அளித்த ஆண்டிபயாடிக் மருந்துகள் மிக வீரியமானவை. இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் அளிக்கப்பட வேண்டியவை. வயதில் மூத்தவரான அவருக்கு அந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டதால் அவரது குடல் பாதித்திருக்கிறது. அதனை சரி செய்ய சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். 

ஆறு மாதங்களுக்கு முன் விஜயதசமி அன்று ஒரு விவசாயியின் நிலத்தில் தேக்கு மரக்கன்றுகளை நட்டோம். தண்ணீர் ஊற்ற வேண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அவரிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தேன். ஒரு மாயக் கணத்தில் தண்ணீர் முறையாகக் கொடுத்தால் கன்றின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். வாரம் ஒருநாள் முறையாக இப்போது தண்ணீர் பாய்ச்சி விடுகிறார். அந்த வயலைச் சென்று பார்த்தேன். கன்றுகள் சிறப்பாக வளர்ந்திருந்தன. 

இரண்டு ஆண்டுகள் முன் கன்று கொடுத்தவரின் வயலில் இப்போது தேக்கு மரங்கள் இருபது அடி உயரம் சென்றுள்ளது. அதனையும் பார்வையிட்டேன். 

அந்த ஊரில் உள்ள இளைஞர் ஒருவர் தனது சகோதரியின் ஒரு ஏக்கர் நிலத்தில் தேக்கு பயிரிட வேண்டும் என்று சொன்னார். வயலைச் சென்று பார்ப்போம் என்று சொன்னேன். ஊரில் உள்ள விஷ்ணு ஆலயத்தைச் சுற்றி ஒரு நந்தவனம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னிடம் கூறினார். தேவையான மரக்கன்றுகளை அளிப்பதாக உறுதி அளித்தேன். 

சென்ற ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டி அளித்த நந்தியாவட்டை கன்றுகள் அனைத்தும் சிறப்பாக வளர்ந்து சிறப்பாக பூக்கின்றன. அவற்றை ஒவ்வொரு முறை காணும் போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.