Monday 24 April 2023

காய்ச்சலும் பாய்ச்சலும்

பயிர் சிறப்பாக வளர பயிரின் வேருக்கு தண்ணீர் ‘’காய்ச்சலும் பாய்ச்சலும்’’ என்ற அடிப்படையில் - பாணியில் விடப்பட வேண்டும். அதாவது பயிர் வளர எவ்வளவு நீர் தேவையோ அந்த அளவு நீரே செடியைச் சுற்றி இடப்பட வேண்டும். அவ்வாறு விடப்படும் நீர் மண்ணுக்குள் சென்று பயிரின் வேர்ப்பகுதிகளில் ஈரத்தை நிலைநிறுத்தும். மேல்மண் சூரிய ஒளியால் காயத் துவங்கும். ஈரமான வேர்ப்பரப்பிலிருந்து காய்ந்த மேல்பரப்புக்கு ஈரம் வந்து வெயிலில் ஆவியாகும். பயிரின் வேர் தண்டுக்கும் இலைகளுக்கும் நீரைக் கடத்தி பயிரை வளரச் செய்யும். பயிருடன் களைகளும் வளரும். அந்த களைகளை பிடுங்கி வேரை முறித்து நீக்கி விட்டு தாள்களை பயிரைச் சுற்றி போட்டு விட வேண்டும். அவ்வா\று செய்தால் மேல்மண் சூரிய ஒளியால் உடனடியாகக் காயாது. சில தினங்களுக்கு அந்த களை மூடாக்கு ஈரத்தைத் தக்கவைக்கும். இந்த காய்ச்சலும் பாய்ச்சலும் முறை எல்லா பயிருக்குமே மிகவும் உகந்தது. 

‘’காவிரி போற்றுதும்’’ தேக்கில் அதிக கவனம் செலுத்துவதால் தேக்குச் செடிகளுக்கு குடத்தில் நீர் விடுமாறு கேட்டுக் கொள்வேன். வாரம் இருமுறை அரைக்குடம் தண்ணீர் விட்டால் கூட போதுமானது. 

காவிரி வடிநிலத்தின் விவசாயிகள் மோட்டாரைப் போட்டு விட்டு வயல் முழுதும் நீரைக் கட்டித் தேக்கும் விவசாயத்துக்குப் பழகியிருக்கிறார்கள். அதன் மறுபக்கமாக மரப்பயிர்கள் தண்ணீர் இன்றி தானாக வளரும் என்றும் எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு கன்றுக்கு வாரம் இருமுறை அரைக்குடம் தண்ணீர் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். 

காய்ச்சல் இருக்கும் போது கன்று நீருக்கு ஏங்கும். நீர் ஊற்றப்பட்டதும் நீரை உண்டு செடி வேகமாக வளரும். நீரைத் தேடி வேரும் மண்ணை அகழ்ந்து சென்று வேர்பிடிக்கும். 

எனக்குத் தொழில் விவசாயம் இல்லை. எனினும் விவசாயத்தை முழு நேர - முழு வாழ்க்கைப் பணியாக செய்யும் விவசாயிகளிடம் அவர்கள் நோக்கத் தவறும் செயலில் விடுபடும் விஷயங்களை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. 

காய்ச்சலும் பாய்ச்சலும் தானே விவசாயம். அதுதானே வாழ்க்கையும்.