Wednesday 26 April 2023

வண்ணமயம்

 

வீட்டில் வண்ணப்பூச்சுப் பணி நடந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டில் ஆண்டுக்கொரு முறை வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. கிளிஞ்சல் சுண்ணாம்பினை வீட்டுச் சுவர்களில் தை மாதத்தில் பூசுவார்கள். மழைக்காலமும் குளிர்காலமும் முடிந்து சூரியன் உத்வேகம் பெறும் வானியல் மாற்றத்தின் காலகட்டத்தில் வீடுகளின் சுவர்களில் சுண்ணாம்பு பூசுவார்கள். சுண்ணாம்பு கடலிலிருந்து அதன் மூலப்பொருளான கிளிஞ்சலிலிருந்து உற்பத்தி செய்யப்படுவது. கடலுக்கு தூய்மையான இயல்பு உண்டு. அதன் உப்புத்தன்மை அனைத்தையும் உண்டு செரிக்கும் தன்மை கொண்டது. அவ்வாறான கடலில் உற்பத்தியாகும் கிளிஞ்சலுக்கும் தனது சூழலைத் தூய்மைப்படுத்தும் தன்மை அதன் இயல்பிலேயே இருக்கிறது. தங்கள் வீடுகளில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் மங்கலத்தையும் விரும்பும் மக்கள் தங்கள் வாழிடம் புத்துணர்வுடன் இருக்க தை மாதத்தில் வீட்டுச் சுவர்களில் சுண்ணாம்பு பூசுவார்கள். 

கான்கிரீட் கட்டிடங்களின் சுவர்களில் கூட சுண்ணாம்பு பூசும் வழக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்தது. அதன் பின்னர் ‘’செம்’’ எனப்படும் சிமெண்ட் பெயிண்ட்கள் சந்தைக்கு வந்தன. அவற்றிலும் சுண்ணாம்பு மூலப்பொருள். ஆனால் கடல் கிளிஞ்சல் சுண்ணாம்பு அல்ல. பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் சிமெண்ட்டுக்கான மூலப்பொருளான சுண்ணாம்பு. நேரடியாக அதனைப் பயன்படுத்த முடியாது ; சில வேதிமாற்றங்களுக்கு உட்படுத்தி வண்ணப்பொடியாக மாற்ற வேண்டும். 

இப்போது சந்தையை ‘’எமல்ஷன்’’ பெயிண்ட்கள் ஆக்கிரமித்துள்ளன. அவை முழுக்க முழுக்க செயற்கையான வேதிப்பொருட்களால் ஆனவை. ‘’காரீயம்’’ எனப்படும் ‘’லெட்’’ என்னும் உலோகமே அவற்றின் முக்கியமான அடிப்படைப் பொருள். காரீயம் மனித சுவாசத்துக்கும் மனித நுரையீரலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியது. எனது நண்பர் ஒருவர் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னால் பெயிண்டிங் வேலை நடைபெற்றது. அது மழைக்காலம். பெயிண்ட் காயும் நேரம் கூடுதலாக தேவைப்படும். மழைக்காலம் என்பதால் வீட்டின் உள்ளே வேலை செய்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் நண்பரின் பெற்றோர் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது. இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் நிலை உண்டாகி விட்டது. 

சில மாதங்களுக்கு முன்னால், காதி இந்தியா நிறுவனம் மாட்டுச்சாணத்தை அடிப்படையாய்க் கொண்ட ‘’எமல்ஷன்’’ பெயிண்ட் உற்பத்தி செய்துள்ளது என்ற செய்தியை அறிந்தேன். இல்லத்துக்கு வண்ணம் பூசினால் அந்த பெயிண்டைப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுத்தேன். சாணத்தால் வீட்டை மெழுகுதல், வீட்டுச் சுவர்களை மெழுகுதல் என்னும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உள்ள நடைமுறை. பசுஞ்சாணம், கோநீர், நெய், தயிர், பால் என பசுவிலிருந்து கிடைக்கும் இந்த ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘’பஞ்சகவ்யா’’ ஆலயங்களின் இறைத் திருமேனிகளைத் தூய்மைப்படுத்த பயன்படுவது. மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரிக்கும் விதத்திலும் கிராமப் பொருளாதாரத்தில் மேம்பாடைக் கொண்டு வர பல ஆண்டுகாலமாக செயலாற்றி வரும் மத்திய அரசின் ஆதரவைப் பெற்ற காதி இந்தியா நிறுவனத்தின் படைப்பை ஆதரிக்கும் விதத்திலும் ‘’பிரகிருதிக்’’ எனப் பெயர் கொண்ட ‘’எமல்ஷன்’’ பெயிண்டால் வீட்டில் வண்ணம் தீட்டினேன். 

பெயிண்டர்கள் என்னிடம் கூறினர். ‘’ சார் ! எமல்ஷன் பெயிண்ட் 20 லிட்டர் வாலியை திறக்கும் போதே ‘’குப்’’ன்னு கெமிக்கல் நெடி அடிக்கும். அந்த நெடியோட பெயிண்ட் அடிக்கும் போது மூச்சுத்திணறலே வந்துடும் போல சுவாசம் இருக்கும். ஆனா இந்த பெயிண்ட்ல கெமிக்கல் நெடி சுத்தமா இல்ல சார். கவரேஜ் ஏரியாவும் நல்லா இருக்கு. நல்லா இருக்கு சார் இந்த பெயிண்ட்’’