Friday 28 April 2023

ஒரு புதிய எண்ணம்

’’காவிரி போற்றுதும்’’ பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் வேட்கையும் அதன் அமைப்பாளர் என்ற முறையில் எனக்கு எப்போதுமே உண்டு. அருகு போல் வேரூன்றி ஆல் போல் ‘’காவிரி போற்றுதும்’’ தழைக்க வேண்டும் என்பதை எண்ணாத நாள் இல்லை. எனினும் நாம் நுண் அலகிலான செயல்களை முன்னெடுக்கிறோம். அனைவரையும் பங்கெடுக்க செயலாற்ற வைக்கிறோம். அதன் மூலம் கிராம மக்களை இணைக்கிறோம் அல்லது இணைக்க முயற்சி செய்கிறோம். 

தமிழகத்தின் விவசாயியை தன்னம்பிக்கை கொண்ட சுய சார்புள்ள ஒரு பொருளியல் சக்தியாக மாற்ற வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு அடிப்படை. தமிழகத்தின் ஒரு கிராமத்திலாவது  அந்த கிராமத்தில் உள்ள விவசாயக் குடும்பங்களும் பொருளியல் தன்ன்றைவு பெற்றுள்ள நிலையை அடையச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்படுகிறது. ஒரு கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக்கன்றுகளை அளிப்பதன் மூலம் 15 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.20,00,000 வருமானம் கிடைக்க வேண்டும் என்று உத்தேசித்து நாம் செயல்படுகிறோம். 

சிறப்பான இலக்குதான். திட்டமிடலும் சிறப்பாகவே உள்ளது. எனினும் நாம் ஐந்நூறு விவசாயக் குடும்பங்களை உத்தேசிக்கும் போது விவசாயம் செய்வதில் விவசாயத்தை செயல்படுத்தும் முறைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மரங்கள் சிறப்பாக வளர என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக விவசாயிகள் ஒரே கிராமத்தில் உள்ள மண் சில இடங்களில் சத்து மிகுந்ததாகவும் சில இடங்களில் சத்து குறைந்ததாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்கள். அது ஒரு பகுதி உண்மை. முழு உண்மை அல்ல. எந்த இடத்திலும் ஒரு மரக்கன்றை நடும் போது 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட ஒரு குழியை எடுத்து அதில் மக்கிய சாண எரு இட வேண்டும். இந்த எட்டு கன அடி (2*2*2) சாண எரு அந்த மரக்கன்றின் அடிமண்ணாகச் செயல்பட்டு மரத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். ஏற்கனவே இருக்கும் மண் சத்தானதா இல்லையா என்பது முதன்மையான விஷயம் இல்லை. மக்கிய சாண எரு எந்த சத்தான மண்ணையும் விட சத்து மிகுந்தது. குழி எடுக்கப்படும் எட்டு கன அடி கொள்ளளவிலேயே கன்றுகள் வேர்விடப் போகின்றன. அந்த கொள்ளளவு மரங்களுக்கு தங்களுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள போதுமானது.  இதனை விவசாயிகள் மனதில் பதிக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ‘’காவிரி போற்றுதும்’’ இருப்பதிலேயே மிக மிக செலவு குறைந்த வழிமுறை எதுவோ அதையே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறது. ஐந்நூறு பேரிடம் இந்த விஷயம் சென்று சேரும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதனை உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதும் ஒவ்வொரு விதத்தில் செயலாற்றுவார்கள் என்பதும் நடைமுறை உண்மை. 

தேக்கு மரம் விவசாயிகளுக்கு பொருளியல் பலன் தரும் என்றாலும் அதனை அவர்களுக்கு அளிக்கும் முன் மரம் வளர்ப்பில் வேறு சில மரங்களைக் கொண்டு அவற்றை வளர்த்து அவர்களுக்கு ஒரு பழக்கத்தை உருவாக்கலாம் என எண்ணினேன். 

செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, நாவல் என ஏழு மரக்கன்றுகளை அளிக்கலாம் என ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிட்டுள்ளது. 

ஒரு நாளைக்கு கிராமத்தின்  20 குடும்பத்தினரை நேரில் சந்தித்து மரம் நடும் முறை குறித்து அவர்களிடம் நேரடியாகப் பேசி இந்த கன்றுகளை வழங்குவது அவர்களுக்குப் பயன் தரும் என எண்ணுகிறேன். அவர்கள் எவ்விதம் நாம் அளிக்கும் குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அவதானிக்கவும் எவ்விதமான ஐயங்கள் எழுகின்றன என்பதை அறிந்து அவற்றைத் தீர்த்து வைக்கவும் ஒரு வாய்ப்பு உருவாகக் கூடும். 

கிராமத்தில் காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை மூன்று மணி நேரம், நேரம் ஒதுக்கினால் 20 குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு விஷயத்தை விளக்கி அவர்களுக்கு மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா , எலுமிச்சை ஆகிய மரக்கன்றுகளை அளிக்க முடியும். கிராமத்தின் எல்லா குடும்பங்களுக்கும் மரக்கன்றுகளை கொண்டு சேர்க்க இதே திட்டமிடலில் 30 நாட்கள் ஆகும். 

பணி இத்துடன் முடிந்து விடாது. அவர்கள் எவ்வாறு மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்து அவர்களுக்கு இடத்துக்கு தக்கபடி ஆலோசனைகள் வழங்க வேண்டும். அவர்கள் வாரம் இருமுறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.