Tuesday 16 May 2023

ஆடிப்பட்டம் நோக்கி

 நேற்றும் இன்றும் செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று மக்கள் நெல்லி மரக்கன்றுகளை நட்டுள்ளார்களா என்பதை விசாரித்து வந்தேன். பலர் மரக்கன்றைத் தோட்டத்தில் நட்டுள்ளனர். சிலர் இன்னும் ஓரிரு நாளில் நடலாம் என எண்ணம் கொண்டுள்ளனர். அவ்வாறு எண்ணம் கொண்டவர்களுக்கு நேரில் சென்று விசாரித்தது உடன் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 

பூசணி, சுரை, பீர்க்கன், பரங்கி ஆகிய விதைகளை சென்ற முறை அந்த கிராமத்தில் அளித்தோம். அதற்கு நல்ல பலன் இருந்தது. பொங்கலையொட்டி மூட்டை மூட்டையாக அவை விளைந்தன. மக்கள் நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர். இந்த ஆண்டு விதைகளாக இல்லாமல் மேற்படி விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளாக அளிக்கலாம் எனத் திட்டம். நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கான முறைகள் பலவற்றை இன்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன். உண்மை என்னவென்றால், விவசாயம் தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் நான் ஆரம்பநிலையிலிருந்து கற்க வேண்டும் என்ற இடத்தில் இருப்பவனே. I think I can ; I knew I can என ஒரு ரயில் என்ஜின் பாடுவதாக ஒரு கவிதை உண்டு. அவ்விதமே என்னால் இயலும் என எண்ணி என்னால் இயலும் என அறிகிறேன்.

குழித்தட்டு முறையில் பூசணி, சுரை, பீர்க்கன் , பரங்கி ஆகிய விதை நாற்றுக்களை உருவாக்கி மக்களிடம் அளிக்கலாம் என இருக்கிறேன்.