Friday 5 May 2023

இறைமை நிழலில் அமைதி

இன்று காலை எனது நண்பர் ஒருவர் இயற்கை எய்தினார். எனது நண்பர். என் மேல் மிகுந்த பிரியம் கொண்டவர். கட்டுமானப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். தனது கடமையையும் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றியவர். தொழிலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளும் காலை 8.20 மணிக்கு கடையின் சாவிகளுடன் கையில் ‘’இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ செய்தித்தாளுடன் கடை வாசலில் நின்றிருப்பார். அவரை நான் அறிமுகம் செய்து கொண்ட காலத்தில் கடையின் ஷட்டரை அவர் திறக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அதனால் கடையின் பணியாளர் வருகைக்காகக் காத்திருப்பார். 8.30க்கு பணியாளர் வந்து கடை திறப்பார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தினமும் காலை ‘’இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ வாசிக்கும் பழக்கம் உடையவர். 

அதிர்ந்து பேச மாட்டார். சினம் கொள்ள மாட்டார். ஒரு ராணுவ வீரனுக்குரிய கூர்மையான பார்வையைக் கொண்டவர். வள்ளலார் மீது பெரும் ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டின் மூன்று குழந்தைகளை உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம் பள்ளியில் படிக்க வைத்தார். அவரது ஊரில் இருந்த ஆன்மீக அமைப்புகள் பலவற்றை பலவிதங்களிலும் ஆதரித்தவர். 

கடந்த சில வாரங்களாக அவரது  உடல்நிலை நோயுற்றிருந்தது. சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய் மீண்டு உடல் நலம் பெறுவார் என்றுதான் அனைவரும் எண்ணிணோம். நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு இன்று காலை வந்தார். வீட்டில் பதினைந்து நிமிடங்கள் இருந்திருக்கிறார். அதன் பின் உயிர் பிரிந்திருக்கிறது. 

இன்று காலை அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரது உடலும் முகமும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் போல் இருந்தது. 

ஒரு மூத்த சகோதரரை இழந்த உணர்வு எனக்கு இருக்கிறது. 

சகோதரர் இறைமையின் நிழலில் அமைதி கொள்ளட்டும். 

சாந்தி சாந்தி சாந்தி