Friday 2 June 2023

நிதிப் பரவல்

 இன்று காலை எனது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். இயற்கை விவசாயத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது அவரிடம். நெல் விவசாயம் மட்டும் செய்து வந்தார். எனக்கு அவர் அறிமுகமானது 7 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது தான் அவர் இயற்கை விவசாயத்தில் பயிற்சி எடுத்திருந்தார். முதல் முறை அவரைச் சந்தித்த போதே நான் அவரிடம் மரப்பயிருக்கு மாறுங்கள் என்று சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் விவசாயம் என்றாலே நெல் விவசாயம் தான் என்ற எண்ணத்தில் இருந்தார். பின்னர் பலமுறை நாங்கள் விவாதித்திருக்கிறோம். 

3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டிருக்கும் நண்பரின் வயல் இயற்கை விவசாயியின் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இன்று நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது நெல் விவசாயத்திலிருந்து மரப்பயிருக்கு மாற இருப்பதாகத் தெரிவித்தார். அவருடைய வயலில் ஜே.சி.பி எந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது. நன்செய் வயலை புன்செய் வயலாக மேடாக்கிக் கொண்டிருந்தார். 

திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டேன். எனது நண்பரான ஐ.டி ஊழியரின் வயலில் தேக்கு நன்றாக வளர்ந்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த வயலில் வேலை செய்ப்வர்கள் இவருடைய வயலிலும் வேலைக்கு வந்திருக்கிறார்கள். அப்போது தற்செயலாக ஐ.டி நிறுவன ஊழியரின் வயலில் தேக்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு நன்றாக வளர்வதைக் குறித்து கூறியிருக்கிறார்கள். அந்த வயலைச் சென்று பார்த்தீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். அவரை அழைத்துக் கொண்டு சென்று தேக்கு வயலைக் காட்டினேன். 

மரக்கன்றுகள் வைத்து ஓராண்டு ஆகிறது. அனைத்துமே 13 அடி உய்ரம் வரை சென்று விட்டன. இரண்டு வாரங்கள் முன்பு நான் வந்திருந்தேன். அதன் பின் இப்போது தான் வருகிறேன். இந்த 15 நாளிலேயே ‘’நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான’’ வளர்ச்சி. நண்பர் மிகவும் ஆச்சர்யப்பட்டார். தன்னிடம் 7 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஆலோசனை என்னால் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். 

திரும்பி வரும் வழியில் ஒருவரைச் சாலையில் சந்தித்தோம். அவரது வயலில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. அதனை மேற்பார்வையிட வந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தேக்கு வயலைக் காண வந்ததாக நண்பர் கூறினார். அந்த விவசாயி தானும் இந்த ஆண்டு தனது நிலத்தை தேக்கு வயலாக மாற்ற இருப்பதாகக் கூறினார். ஐ டி நிறுவன ஊழியரின் தேக்கு வயலே தான் இந்த முடிவுக்கு வரக் காரணம் என்றார் அந்த விவசாயி.