Sunday 11 June 2023

நிழல் அமர்வுகள்

 ஊரில் ஒரு இடம் இருக்கிறது. அதாவது அந்த இடம் பிரதான சாலையொன்றின் அருகே அமைந்துள்ளது. அந்த பிரதான சாலையையொட்டி 10 அடி அகலம் கொண்ட சிறு கால்வாய் அமைந்திருக்கும். அதன் கரையில் ஒரு வினாயகர் கோவில். அந்த கோவிலின் முன்னால் இரண்டு அரசமரங்களும் ஒரு வேப்ப மரமும் உண்டு. கால்வாய்க்கு அப்பால் பிரதான சாலையையொட்டி இரு மருத மரங்கள் இருக்கும். இந்த ஐந்து மரங்களின் நிழலும் நெடுஞ்சாலை தொடங்கி கால்வாய் வினாயகர் கோவில் வரை நீண்டிருக்கும். ஐந்து மரங்களும் நாற்பது அடிக்கு மேல் உயரம் கொண்டவை என்பதால் அவற்றின் நிழல் பரப்பு மிகப் பெரியதாய் அமைந்திருக்கும். வினாயகர் கோவிலின் முன்னால் சிமெண்ட் பெஞ்சுகள் அமைத்திருக்கிறார்கள் அந்த பகுதியில் குடியிருப்பவர்கள். சாமி கும்பிட வருபவர்கள் சாமி கும்பிட்டு விட்டு அந்த பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள். அந்த இடத்துக்குச் சென்றாலே மனம் புத்துணர்ச்சி கொள்ளும். நண்பர்களுடன் மனம் விட்டு உரையாட அங்கு அழைத்துச் செல்வேன். மர நிழலும் மரங்களில் வசிக்கும் புள்கள் எழுப்பும் ஒலியும் அகத்தை நினைவுகளை இனிமை கொள்ளச் செய்யும். இதே போல மரங்களின் நிழல்களில் நிறைய இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றாக அமர்ந்து யோசிப்பதால் நிறைய விஷயங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும்.