Wednesday 25 October 2023

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 2)

 நவீன வாழ்க்கை உணவு ஞாபகத்தை அதிகம் சுமக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்தே அதைக் கூறுகிறேன். காலை விழித்தெழுந்ததும் நமக்கு தேனீர் அல்லது காஃபியின் ஞாபகம் வருகிறது. காலை நமக்கு கேசரியின் ஞாபகமோ பிரதமனின் ஞாபகமோ வருவதில்லை. தேனீர் காஃபியை விட அவற்றை நாம் விரும்பியிருப்போம். ஆனால் காலை காஃபி தேனீர் தவிர்த்த வேறெந்த நினைவும் எழுவதில்லை. நமது உடல் அந்த ருசிக்கு பழகியிருக்கிறது. பாலின் ருசி. சர்க்கரையின் ருசி. சர்க்கரையை செரிக்கச் செய்ய ஜீரண சுரப்பிகள் அதிகம் சுரக்கத் தொடங்குகின்றன. நம் உடல் இயங்கத் துவங்குகிறது என்னும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. காலை 6 மணி, காலை 11 மணி, மாலை 4 மணி என ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனீர் அல்லது காஃபியை நாம் உட்கொள்கிறோம். கிட்டத்தட்ட வாழ்நாள் பழக்கமாகவே இது நீடிக்கிறது. தேனீரும் காஃபியும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகள் அல்ல. அவை ஜீரண சுரப்பிகளை அதிகம் சுரக்க வைத்து செரிமானம் ஆகுபவை. குறைவான உடல் உழைப்பு கொண்ட பணிகளில் இருப்பவர்கள் பால், காஃபி, தேனீர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நலம். நான் என்னுடைய வாழ்க்கையில் பலமுறை பால் , காஃபி , தேனீரைத் தவிர்த்திருக்கிறேன். மூன்று ஆண்டுகள் நான்கு ஆண்டுகள் பால் காஃபி தேனீர் அருந்தாமல் அதே போல் மூன்று முறை இருந்திருக்கிறேன். மூன்று முறைகளில் 12 ஆண்டுகள். எனினும் மீண்டும் அந்த பழக்கத்துக்கு ஆளானேன். எப்போதும் கிடைப்பது, தேனீர் அளித்து உபசரிப்பது என்பது ஒரு உபசரிப்பு வழக்கமாக நிலை கொண்டிருப்பது, எல்லாரும் அருந்தச் சொல்லி வற்புறுத்துவது என்பவை தொடர முடியாமல் போனதற்கு காரணங்கள். 


இன்றும் எளிய விலை கொண்ட உணவுப்பொருள் தேனீரும் காஃபியும் தான். ரூ. 10 மற்றும் ரூ. 15. நம் சமூகத்தில் அவை தொழிலாகவே நிலை கொண்டுள்ளன. பால் பாக்கெட் விற்பனையும் தேனீர்க்கடையும் இன்று லாபகரமான தொழில்கள். நம் வீடுகள் குலிர்சாதனப் பெட்டிகளில் பால் பாக்கெட்களை சேகரித்து வைக்கின்றன.

பால் காஃபி தேனீர் இவற்றுக்கு மாற்றாக எதை அருந்தலாம்? நிலக்கடலை ஜூஸ் பொருத்தமான மாற்றாக இருக்கக்கூடும். நிலக்கடலை புரதச்சத்து மிகுந்தது. எளிதில் செரிமானம் ஆகும். வென்னீரில் சுக்குப் பொடி கலந்து அருந்தலாம். உடலின் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவது. இந்த உபவாசத்துக்குப் பிறகு பால் காஃபி தேனீர் அருந்தப் போவதில்லை. 

தமிழ்ச் சமூகத்தின் காலை உணவாக இட்லி தோசை பொங்கல் உப்புமா உள்ளன. அவை எளிய உணவுகள் தான். தொடுகறியாக செய்யப்படும் சட்னிகள் காரம் குறைந்தவையாக இருப்பின் நலம். காலை உணவிலும் தொடுகறியிலும் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. வயிறு முட்ட உண்ணாமல் பாதி வயிறு உண்டால் போதும். நம் சமூகம் வயிறு முட்ட உண்பதையே பழக்கப்படுத்துகிறது. குழந்தைகளை அவ்வாறே பழக்குகிறோம். பல விதமான உணவுகள் என்பதே சமூக அந்தஸ்து என நம்புகிறோம். 

தமிழ்ச் சமூகம் தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை உணவுக்காகச் செலவழிக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஊரெங்கும் பெருகும் பேக்கரிகள் அதற்கு உதாரணம். சிறு கிராமங்களில் கூட பேக்கரிகள் வந்து விட்டன. குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் முக்கிய இடம் பெறுவது காரணம். 

மதிய உணவு பாதி வயிறு நிறையும் அளவில் உண்டால் போதும். வழக்கமாக உண்ணும் தொடுகறிகளின் அளவை இருமடங்காகவும் சோற்றின் அளவை பாதியாகவும் குறைத்துக் கொண்டால் போதும்.