எனக்கு நிறைய விருப்பங்கள் உண்டு. அவற்றில் பெரும்பான்மையானவை பயணங்கள். இன்னும் எனது ஆகப் பெரிய பயணங்களைத் துவங்கவில்லை என்றே என் மனம் நம்புகிறது. எனது தொழில் நான் நெடுநாட்கள் ஊரில் இல்லாமல் இருக்க அனுமதிக்காது. இருப்பினும் பெரும் பயணங்கள் என் விருப்பமாக உள்ளன.
‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் எனக்கு மிக முக்கியமானவை. அவற்றை என் கடமை என்று எண்ணியே செயல்படுகிறேன். செயல் புரியும் கிராமத்தில் நாம் எண்ணும் வண்ணம் சில செயல்கள் நிகழ்ந்திருப்பினும் மனம் இன்னும் இன்னும் என வேகத்தை எதிர்பார்க்கிறது.
எனது விருப்பங்கள்
(1) நர்மதை நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து சமுத்திரத்தில் சங்கமிக்கும் இடம் வரை பயணித்து நதியை படகின் மூலம் கடந்து மீண்டும் உற்பத்தியாகும் இடத்துக்கு வந்து சேரும் ‘’நர்மதா பரிக்ரமா’’ என்னும் பாதயாத்திரையை நிகழ்த்த வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். 2500 கி.மீ நடைப்பயணம். யாத்திரையைத் தொடங்குவதற்கு முன் மூன்று மாதங்கள் நடந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் 10 கி.மீ மாலையில் 10 கி.மீ நடந்து பழகினால் பரிக்ரமாவின் போது சிரமம் இன்றி நடக்க முடியும். 21 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தவுடன் காலையும் மாலையும் 10 கி.மீ நடந்து பயிற்சி எடுக்க உள்ளேன்.
(2) ராமேஸ்வரத்திலிருந்து காசி வரை ஒரு நடைப்பயணம் மேற்கொள்ள விருப்பம்.
(3) ஆண்டுக்கு ஒருமுறை மலையேற்றம் ஒன்று மேற்கொள்ள வேண்டும்.
(4) ஆண்டுக்கு ஒருமுறை இந்திய நிலமெங்கும் ஒரு மோட்டார்சைக்கிள் பயணம்.
(5) 42 கி.மீ மாரத்தான் ஓட்டத்துக்குப் பயிற்சி எடுத்து முதலில் ஒரு மாரத்தான் ஓட்டத்தை ஓடி நிறைவு செய்ய வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒன்று.