மூன்று நாட்களாக எழுதிய பதிவுகளில் பாதி வயிறு உண்பது குறித்து எழுதியிருந்தேன். பாதி வயிறு உண்கிறோமோ வயிறு முட்ட உண்கிறோமோ என்பதை விட நாம் எவ்விதமான உடல் உழைப்பை தினமும் அளிக்கிறோம் என்பது முதன்மையானது. தினமும் 5 கிலோ மீட்டர் நாம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோம் எனில் நாம் வயிறு நிறைய உண்ணலாம். மூன்று வேளையும் உணவு அருந்தலாம். உடல் உணவின் மூலம் எத்தனை ஆற்றலை உருவாக்குகிறதோ அதற்கு ஏற்றாற் போல ஆற்றல் செலவழிக்கப்பட வேண்டும். குறைவான உடல் உழைப்பு கொண்டவர்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.
நான் நாடெங்கும் பயணித்தவன். பலவிதமான உணவு வகைகளை உண்டவன். எல்லா விதமான ருசியான உணவுகளையும் கொண்டாடுபவன் நான்.
அவரைக்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், மாங்காய், கீரை, கீரைத்தண்டு , பூசணிக்காய், பீர்க்கன்காய், பரங்கிக்காய், சுரைக்காய் ஆகிய காய்கறிகளை விரும்பி உண்ணக்கூடியவன் நான். கோஸ் பொறியல் எனக்கு மிகவும் பிடிக்கும். மைசூர் பகுதிகளின் மசால் தோசை நான் விரும்பும் ஒன்று. வட இந்திய உணவுகளில் ‘’நாண்’’ மிகவும் பிடித்த உணவு. அதன் தொடுகறியாக பன்னீர் பட்டர் மசால். காளான் உணவுகளும் பிடிக்கும். ‘’தால் ஃபிரை’’ பிடிக்கும்.
இன்று காலை மரவள்ளிக் கிழங்கின் ஞாபகம் வந்தது. சற்று அழுத்தமான கிழங்கு வகை என்பது காரணமாக இருக்கலாம். வயிற்றில் நீண்ட நேரம் இருக்கக்கூடியது என்பதால் அந்த ஞாபகம் உண்டாகியிருக்கலாம்.