Sunday 29 October 2023

ராமன் பெயர்

மகாத்மா காந்தி தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் ராமனின் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருந்தவர். 

பெற்றோருக்கு மகனாகவும் தம்பிகளுக்கு அண்ணணாகவும் மனைவிக்கு கணவனாகவும் குடிகளுக்கு அரசனாகவும் சிறப்பாக தனது கடமையையும் பொறுப்புகளையும் ஆற்றியவன். சிறு குழந்தையிலிருந்தே அவன் மாவீரனாகவும் திகழ்ந்தான். மாவீரனான அவன் பெரும் ஞானி. அடுத்த நாள் முடிசூட்டு விழா என இருந்த நிலையில் வனத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வந்த போது அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவன். 

நாம் பலமுறை கேட்டறிந்த சம்பவமாயினும் எவ்வித அல்லலோ வருத்தமோ இன்றி பொருட்செல்வத்தைத் தவிர்த்து விட்டு செல்வது என்பது ஒரு மாபெரும் செயல். ஒரு ஞானி மட்டுமே அச்செயலை ஆற்ற முடியும். 

ஞானியால் மட்டுமே எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்க முடியும். எல்லா உயிர்களுக்கும் அபயம் அளிக்க முடியும். 

அதர்மம் அவனை துன்புறுத்தியது. துன்புற்றான். பின் மீண்டு அதர்மத்தை அழித்தான். 

பொருட்செல்வத்தின் எல்லைகளை உணர்ந்திருத்தல், அதர்மத்தை எதிர்த்தல் , உயிர்களுக்குத் தஞ்சம் அளித்தல் ஆகிய குணங்கள் அவனை மானுடரின் நினைவில் எப்போதும் வைத்திருக்கிறது. 

அவன் பெயர் உச்சரிக்கப்படும் தோறும் இந்த மேலான இயல்புகள் நினைவுபடுத்தப்படுகின்றன. 

விரத நாட்களில் காலை மாலை இரவு என தினமும் குறிப்பிட்ட நேரம் ராமன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன்.