Sunday 8 October 2023

எனது படைப்புகள் - தொகுப்பு -நூல் வடிவம்


எனது படைப்புகளைத் தொகுத்து நூல்களாகக் கொண்டு வரலாம் என்ற எண்ணம் உள்ளது. 

தமிழில் கவிதை, சிறுகதை, கட்டுரை, பயணக்கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் எனது படைப்புகள் உள்ளன. எனது கவிதைகள் தொகுக்கப்பட வேண்டும். இணைய இதழ்களிலும் அச்சிலும் வெளியான எனது சிறுகதைகளை ஒரு வரிசையில் அடுக்கி தொகுத்து வைத்திருக்கிறேன். தொகுக்கப்பட்ட அந்த சிறுகதைகளை ஒரு சிறுகதைத் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும். கம்ப ராமாயணம் குறித்து ‘’யானை பிழைத்தவேல்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளையும் நூலாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்குப் பிடித்த திருக்குறள்கள் குறித்து ‘’ஆசான் சொல்’’ என்னும் தலைப்பில் குறிப்புகளை எழுதியுள்ளேன். அவையும் நூலாக வேண்டும். இந்திய நிலமெங்கும் மோட்டார்சைக்கிளில் பயணித்து எழுதிய பயணக்கட்டுரையான ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ நூலாக வேண்டும். எனது கட்டுமானத் தொழில் சார்ந்த அனுபவங்களைக் குறித்து எழுதிய குறிப்புகளை ‘’எமக்குத் தொழில்’’ என்ற தலைப்பில் தொகுக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து எழுதிய குறிப்புகளையும் நூலாக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனையையும் எவ்விதம் செய்வது என்னும் மலைப்பு நூலாக்கத்துக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் துவங்க இயலாமல் செய்கிறது. ஒரே நேரத்தில் ஏழு நூல்கள் கொண்டு வர வேண்டும் என்பது பெரும்பணி ; முதலில் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வரலாமா என்று யோசித்தேன். ஏழு நூல்களையும் கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. எந்த முடிவும் எடுக்கப்படாமல் விஷயம் நிலுவையில் உள்ளது. 

நூல் அச்சு வடிவம் பெறுதல் என்னும் பதிப்புப்பணி தனி விதமானது. சில நண்பர்களின் படைப்புகள் சில நூல் வடிவம் பெறுவதில் எனது பங்களிப்பு சிறு அளவில் இருந்திருக்கிறது என்பதால் நூல்களின் உருவாக்கம் குறித்த அறிமுகமும் சிறு பரிச்சயமும் எனக்கு உண்டு. 

எழுதுவதுடன் என் பணி முடிந்து விட்டது என்றே நான் எண்ணுகிறேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் அவ்வாறு தோன்றும். எனது படைப்புகள் நான் எண்ணும் வண்ணம் வெளியாக நாளும் பொழுதும் கூடி வர வேண்டும். பார்க்கலாம்.