Tuesday 10 October 2023

உண்ணா விரதம் ( நகைச்சுவைக் கட்டுரை)

 அமைப்பாளருக்கு சகோதரன் போன்றவனும் உயிர் நண்பனுமான வங்கி மேலாளர் அமைப்பாளருக்கு ஃபோன் செய்தார். 

‘’அண்ணன் ! உங்க தளத்துல 21 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போறதா சொல்லியிருக்கீங்க. அந்த பதிவை வாசிச்சேன். அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கறதே உங்களுக்கு வேலையா இருக்கு’’ 

மேலாளர் குரலில் கடும் கோபம் வெளிப்பட்டதை அமைப்பாளர் உணர்ந்திருந்தார். இந்த நேரத்தில் எது சொன்னாலும் சரியாக இருக்காது என்பதால் மௌனமாக இருந்தார். 

‘’இப்ப உங்களுக்கு ஒரு பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நடந்துட்டு இருக்கு. ஒரு பெரிய ஒர்க் இன்னும் ஒரு மாசத்துல ஆரம்பிக்க இருக்கீங்க. இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா அண்ணன்?’’

அமைப்பாளர் அதற்கும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். 

‘’எனக்கு நல்லா தெரியும் உங்களால பசி தாங்க முடியாது. சாப்பாட்டு ஞாபகம் இல்லாம உங்களால எத்தனை மணி நேரம் வேணும்னாலும் இருக்க முடியும். ஆனா சாப்பாடு ஞாபகம் வந்துட்டா உங்களுக்கு உடனே சாப்ட்டு ஆகனும். ‘’

மேலாளர் சரியாகவே அவதானித்திருக்கிறார் என அமைப்பாளர் எண்ணினார். 

‘’என்ன சைலண்ட்டா இருக்கீங்க. விரிவா விளக்கம் கொடுப்பீங்களே?’’

அமைப்பாளர் துவங்கினார் . ‘’ தம்பி ! நீ சொல்றது எல்லாமே நூத்துக்கு நூறு உண்மை ‘’

மேலாளர் மௌனமாக இருந்தார். அவர் விளக்கத்துக்கு செவி கொடுக்க தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து தான் நினைப்பதைக் கூற ஆரம்பித்தார் அமைப்பாளர். 

‘’முதல் விஷயம் நான் அறிவிச்சதால தான் உங்க அத்தனை பேருக்குமே விஷயம் தெரிஞ்சது. நான் இதைச் சொல்லாம முயற்சி செய்திருக்க முடியும்’’

‘’உண்மைதான்’’

‘’நண்பர்களும் நலம் விரும்பிகளும் இதை ஏத்துக்கவே மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். கவலைப்படுவீங்கன்னும் எனக்குத் தெரியும்’’

மேலாளர் மௌனமாக இருந்தார். 

‘’முதல்ல நான் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தறன். 21 நாள் உண்ணாவிரதம் இருக்கணும்னு நினைக்கறன். 3 நாளைக்கு மேல் முடியலைன்னா நான் உண்ணாவிரதத்தை முடிச்சுக்கறன்னு அறிவிச்சுடறன். 21 நாள் சொன்னமே 3 நாள்ல முடிச்சுக்கறனேன்னு ஃபீல் பண்ண மாட்டேன். ‘’

’’முடியலன்னா முடிச்சுக்க தானே வேண்டும். உங்களுக்கு வேற வழி இல்லையே ‘’ என்றார் மேலாளர். அவர் சொல்வது உண்மைதான் என எண்ணினார் அமைப்பாளர். 

‘’ நான் உனக்கு ஒரு வாக்கு கொடுக்கறன். எனக்கு ரொம்ப சிரமமா இருந்தா ஒரு நிமிஷம் கூட உண்ணாவிரததைக் கண்டினியூ பண்ண மாட்டேன். ‘’ 

மேலாளர் ஒன்றும் சொல்லவில்லை. 

‘’கே. எஸ் ஸும் நீங்களும் ஜெயின் டெம்பிள்ஸ் போயிட்டு வந்ததிலிருந்துதான் நீங்க இப்படி ஆரம்பிச்சிருக்கீங்க. அவன் நல்லா நார்த் இந்தியால ‘’நான் - கோபி மஞ்சூரியன்’’ சாப்டிட்டு இருக்கான்’’

‘’கே. எஸ் ஸை குத்தம் சொல்லாத. அவன் என்ன செய்வான்?’’

‘’அவன் உண்ணாவிரதம் பத்தி என்ன சொன்னான்?’’

‘’ஜெயின் டெம்ப்ள்ஸ்ல இருந்தப்பவே உங்களுக்கு மனசுல தோணிடுச்சுன்னு சொன்னான்’’. 

‘’இதெல்லாம் எதுக்கு அண்ணன்?’’

‘’ஒரு சேஞ்ச்க்குன்னு வச்சுக்க’’

‘’காந்தி ஜெயந்தி அன்னைக்கு ஃபாஸ்டிங் ஆரம்பிக்கணும்னு பிளான் பண்ணீங்க. அதுவே உங்களால முடியல். சைட் ஒர்க் இருந்துச்சு. நீங்க இருந்து ஆகணும். போஸ்ட் போன் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு எப்ப ஒர்க் இல்லாம இருக்கும் சொல்லுங்க?’’

‘’உண்மைதான்’’ 

‘’ஃபாஸ்டிங் இருக்கறப்ப வெயில்ல வெளிய போகாதீங்க. வெளியில போறத குறைச்சுட்டு வீட்டுல இருங்க. நீங்க மனசால நினைக்கற அளவு விஷயம் ஈஸி இல்ல’’ 

‘’பாத்துக்கறன் தம்பி’’

‘’எனக்கு கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கட்டும்’’

‘’எப்பவும் ஞாபகம் இருக்கும் தம்பி’’.