Sunday 3 December 2023

சித்திரம் - கவிதை - கடிதம்

லலிதம்
-------------

மென்குளிர் சிறு தடாகம்
மலர்ந்திருக்கிறது முழுமை கொண்ட பத்மம்
தடாகத்தின் கரையில் வான் நோக்கி விரிந்திருக்கிறான்
மரங்களின் கொற்றவன்
மரத்தின் உகிரில்
மலரமர்வில் அமர்ந்து
மோனித்திருக்கிறான்
புத்தன்
மென்மை
மெல்லிய புன்னகை
அவன் மௌனமும் மென்மை 
அன்றொரு நாள்
அவனுக்கு அன்னமிட்டவள்
இன்று 
காட்டு மலர்கள் சேகரித்து
புத்தனுக்கு சூடுகிறாள்
மகவை அலங்கரிக்கும் அன்னையென

***

அன்புள்ள கவிஞர் பிரபு அவர்களுக்கு,

வணக்கம்!  

மிகவும் அருமையான, மனதை தொடும் வரிகள் ஒவ்வொன்றும். முதலில் அதை பார்த்த பொழுது சிறு குழந்தை போல் ஒரு சிறிய வெட்கம் கொண்ட புன்னகை தான் என்னுள் தோன்றியது. ஒவ்வொரு வரிகளும் ஓவியத்திற்கும், புத்தருக்கும் மிக சிறந்த அணிகள் என்றே அமைந்தன. என்னுடைய அன்பு நன்றிகள்!

அன்புடன்,
ல ரா

***