Tuesday 9 July 2024

வரிகள் / விளக்கங்கள் - 1 ( கோடை இரவின் கனவு)

 Now, Fair Hyppolyta

ஷேக்ஸ்பியரின் கோடை இரவின் கனவு நாடகத்தின் முதல் வரி இவ்வாறு துவங்குகிறது. ’’இந்த கணம்’’ என்கிறார் தீசியஸ். இருப்பினும் நிகழ்காலத்தில் தீசியஸின் மனம் நிலைத்து இல்லை. இன்னும் சில நாட்களில் நிகழவுள்ள ஹிப்போலிட்டாவுடனான தனது திருமணம் குறித்த எதிர்பார்ப்பு மிகத் தீவிரமாக தீசியஸிடம் இருக்கிறது. இருப்பினும் சற்றே நிலைப்படுத்தி ‘’இந்த கணம்’’ என்கிறார். 

தீசியஸ் ஹிப்போலிட்டாவை ‘’அழகே’’ என்கிறார். ஹிப்போலிட்டாவிடம் தீசியஸ் காண்பது மேனி அழகையா? மன அழகையா? அவள் புற அழகைப் போலவே அக அகழும் கொண்டவளா? 

Four happy days bring in another moon

அமாவாசைக்கு இரு நாட்கள் முன்பு அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். பழைய நிலவு தேய்ந்து முடியப் போகிறது. பின்னர் நிலவற்ற முழு இருளின் தினம். அடுத்த இரு நாட்களில் துவிதையை தினத்தில் நிலா காட்சி கொடுத்து வளர இருக்கிறது. காதல் வாழ்க்கை முடிந்து திருமண வாழ்க்கை தொடங்கும் ஆர்வத்திலும் உவகையிலும் உத்வேகத்திலும் இருக்கின்றனர் தீசியஸும் ஹிப்போலிட்டாவும். 

Four days will quickly steep themselves in night

Four nights will quickly dream away the time

ஹிப்போலிட்டா இவ்வாறு கூறுகிறாள். திருமண நாளை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணின் கூற்று இது. 

நான்கு நாட்கள் இரவின் அடர்ந்த பொழுதுகளில் மூழ்கும். இரவின் நான்கு அடர்ந்த பொழுதுகள் கனவெனக் கடக்கும்.