Sunday, 14 July 2024

வன வாழ்க்கை - அத்தியாயம் 2 - எனது வாழிடம்

 ஒரு புதிய காலை பிறக்கிறது. லட்சக்கணக்கானோர் அன்றைய தினத்தின் உடல் உழைப்பு குறித்த நினைவுடன் விழிக்கின்றனர். லட்சத்தில் ஒருவர் அறிவார்ந்த கண்டடைதலுடன் எழுகிறார். கோடியில் ஒருவரின் தினம் கவித்துவத்துடனும் தெய்வீகத்துடனும் மலர்கிறது.  உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் தினமும் தெய்வீகத்துடன் உதிக்க வேண்டும் என விருப்பம் கொள்கிறார் தோரோ. 

அதிகாலையில் நீராடுவதை ஓர் ஆன்மீக அனுபவம் என்கிறார் தோரோ. ஒவ்வொரு முறை நீராடும் போதும் நாம் புதிதாக புதிதாக பிறந்தவாறே இருக்கிறோம் எனக் குதூகலத்துடன் கூறுகிறார் தோரோ. 

ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவருந்துதல் என்னும் பழக்கத்தை ஏன் ஒரு வேளை உணவருந்துதல் என பழகிக் கொள்ளக் கூடாது என கேட்கிறார். பத்து வகையான உணவை அருந்துவதை விட ஏன் மூன்று வகையான உணவை அருந்தக் கூடாது என்ற கேள்வியும் தோரோவுக்கு இருக்கிறது.