Sunday 28 July 2024

நீரெனில் கடல்

கல்லூரிப் படிப்பை முடித்ததை ஒட்டிய ஆண்டுகளில் ( சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு) வாரம் ஒரு நாளாவது கடல் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் மாலை 3 மணி அளவில் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பி ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் பூம்புகாருக்கோ அல்லது தரங்கம்பாடிக்கோ செல்வேன். ஒரு வாரம் பூம்புகார் எனில் மறுவாரம் தரங்கம்பாடி.   

கடலைக் காணும் போது உள்ளம் மகிழும். குதூகலம் கொள்ளும். 

வாரம் ஒரு முறையாவது கடல் காணச் செல்லும் வழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என இன்று சென்ற போது எண்ணினேன். 

தடாகம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பின்பு முதல் முறையாகக் கடல் காணச் செல்கிறேன். அந்த உணர்வெழுச்சியின் விளைவாக கடலலைகளுக்குள் நின்று கொண்டு கடலை வணங்கினேன். நீர்க்கடவுள் மேக வர்ணன். நீர்க்கடவுள் கடலின் மீது பள்ளி கொண்டிருப்பவன். ஆழி மழைக் கண்ணன். 

இறைமை பெருங்கடல். அதன் சிறு துளியே மானுடராகிய நாம்.