Saturday 6 July 2024

கவிஞனின் மொழி

 


ஒரு கவிஞன் மொழியில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது மிகப் பெரியது. மகத்தானது. கவிஞன் மொழியின் பிரவாகத்தை புதிய திசைகளுக்குத் திருப்புகிறான். ஒரு கவிஞனின் தாக்கம் பல நூற்றாண்டுகள் மொழியில் இருக்கும். மொழியின் அடித்தளமே கவிஞனின் சொற்கள் தான். நம் நினைவிலிருந்து சில கவிஞர்களை எண்ணிப் பார்ப்போமானால் அதனை வகுத்துக் கொள்ள முடியும். திருவள்ளுவர் 2200 வருடங்களாக தமிழ் மொழியில் ஜீவித்திருக்கிறார். திருஞானசம்பந்தரும் ஆண்டாளும் 1300 ஆண்டுகளாக தமிழுக்கு உயிரளித்துக் கொண்டிருக்கின்றனர். கம்பன் தன் படைப்பால் 800 ஆண்டுகள் நிலைத்திருக்கிறான். குமரகுருபரரும் அருணகிரிநாதரும் 500 ஆண்டுகளாக நிலை கொண்டிருக்கின்றனர். நவீன தமிழ் என்பது பாரதியிலிருந்து தொடங்குகிறது. 

ஆங்கில மொழியின் ஊற்றுக்கண்ணாக ஷேக்ஸ்பியர் விளங்கியிருக்கிறார். அவர் கவிஞராகவும் இருந்திருக்கிறார் ; நாடக ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவரது நாடகங்களில் உள்ள சித்தரிப்புகளில் உரையாடல்களில் கவித்துவத்தின் கூறுகள் இருக்கின்றன. கவிமொழியின் கூருமுறை இருக்கிறது. 

ஒரு ஷேக்ஸ்பியரின் நாடகத்தை வாசிப்போமானால் நாம் அறிந்த பல ஆங்கில் சொற்றொடர்கள் அந்த நாடக வசனங்களாக இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம். அதாவது , ஷேக்ஸ்பியர் நாடக வரிகளே சாமானிய மக்களின் மொழிப் புழக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு வியாபித்திருக்கின்றன. 

ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்குப் பின் பல கவிஞர்கள் உண்டு. ஷெல்லி, மில்டன், வால்ட் விட்மன், ராபர்ட் ஃபிராஸ்ட் ... எனினும் ஷேக்ஸ்பியரின் இடம் என்பது பெரியது. தனித்துவமானது. பிரத்யேகமானது.