Sunday 7 July 2024

கோடை இரவின் கனவு - ஷேக்ஸ்பியர்


தளபதி தீசியஸ் தன் மனம் விரும்பும் ஹிப்போலிட்டாவை இன்னும் சில தினங்களில் திருமணம் செய்ய உள்ளார். ஹிப்போலிட்டாவும் தீசியஸும் திருமண ஏற்பாடுகள் குறித்து உற்சாகமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே ஈகஸ் தன் மகள் ஹெர்மியாவுடன் வருகிறார். உடன் டிமிட்ரியஸும் லைசாண்டரும் வருகிறார்கள். ஈகஸுக்கு தன் மகளை டிமிட்ரியஸுக்கு திருமணம் செய்து தரவே விருப்பம். ஆனால் ஹெர்மியாவும் லைசாண்டரும் காதலிக்கிறார்கள். ஏதென்ஸ் நகரின் அப்போதைய விதிகளின் படி மகள் தந்தை கூறும் நபரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். மறுத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் கிரேக்கக் கடவுளின் ஆலயத்தில் வாழ்நாள் முழுதும் சேவை செய்ய வேண்டும் அல்லது மரணிக்க வேண்டும். ஈகஸ் தன் மகள் குறித்து தளபதி தீசியஸிடம் புகார் கூறுகிறார். ஹெர்மியா தான் லைசாண்டரையே மணப்பேன் என்கிறாள்.  

லைசாண்டர் இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க ஒரு திட்டத்தை முன்வைக்கிறான். ஹெர்மியாவை அன்று இரவு ஏதென்ஸுக்கு அருகில் இருக்கும் ஒரு வனத்துக்கு வரச் சொல்கிறான். அந்த வனமே அவர்கள் முதன் முதலில் சந்தித்த இடம். அங்கிருந்து அடுத்த நகரத்துக்குச் சென்று விடலாம் என லைசாண்டர் கூறுகிறான். அடுத்த நகரில் ஏதென்ஸின் சட்டங்கள் செல்லாது. அங்கே சென்று திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்கிறான். பக்கத்து நகரில் லைசாண்டரின் உறவுக்கார மூதாட்டி ஒருத்தி இருக்கிறாள். அவள் வீட்டில் வாழலாம் என முடிவெடுக்கின்றனர். 

ஹெலனா டிமிட்ரியஸை விரும்பும் ஒரு யுவதி. ஆனால் டிமிட்ரியஸுக்கு ஹெலனா மீது எந்த ஆர்வமும் இல்லை. ஹெலனா ஹெர்மியாவின் தோழி. லைசாண்டரின் திட்டம் தெரிந்து அதனை டிமிட்ரியஸுக்கு தெரிவித்து விடுகிறாள். 

தளபதி தீசியஸின் திருமணக் கொண்டாட்டத்தில் நிகழ்த்த உள்ள நாடக ஒத்திகைக்காக ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று லைசாண்டரும் ஹெர்மியாவும் சந்திக்க உள்ள வனத்துக்கு அன்று இரவு செல்ல திட்டமிடுகிறது. 

தேவதை உலகின் அரசன ஓபரான். அவனது அரசி டைட்டானியா. இருவரும் சிறு ஊடலில் இருக்கிறார்கள். மனிதர்களின் காதல் விருப்பங்கள் இந்த தேவதைகள் எடுக்கும் முடிவாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இருவரும் கொண்டுள்ள ஊடல் ஹெர்மியாவின் காதல் விஷயத்தில் தலையிடுகிறது. 

ஓபரான் ஒரு தேவதைக்கு ஒரு மாய மலர் ஒன்றை அளித்து அதனை அக்காட்டில் இருக்கும் ஏதென்ஸ் நகர உடையணிந்த மனிதன் உறங்கும் போது அவன் கண்களின் மேல் அம்மலரை சாறாகப் பிழியுமாறு கூறுகிறார். அச்சாறு பிழியப்பட்ட கண்ணுடன் அவன் எவரை முதலில் பார்க்கிறானோ அவளுடன் மேலும் காதல் கொண்டு மேலும் இணக்கமாக இருப்பான் என்று சொல்கிறார். அதே மலரை தன் அரசி உறங்கிக் கொண்டிருக்கும் போது அவள் கண்ணிலும் பிழிந்து விடுகிறார் ; தங்கள் ஊடல் தீரும் என்ற எண்ணத்தில். 

எதிர்பாராத விதமாக லைசாண்டர் அன்றைய இரவில் முதலில் ஹெலனாவைப் பார்த்து விடுகிறான். தேவதை அரசி டைட்டானியா நாடக ஒத்திகைக் குழுவில் இருக்கும் கழுதை முகமூடி அணிந்த ஒருவனைக் கண்டு விடுகிறாள். தேவதை அரசியால் காணப்பட்டவன் கழுதை முகம் கொண்டவனாகவே ஆகி விடுகிறான். அவனை டைட்டானியா விரும்பத் தொடங்குகிறாள். லைசாண்டர் ஹெர்மியாவை மறந்து ஹெலனாவை நோக்கி காதல் மொழிகளைப் பேசத் தொடங்குகிறாள். 

திடீர் மாற்றத்தால் ஏகப்பட்ட குழப்பங்கள் நிகழ்கின்றன. 

நிகழ்ந்ததைக் கண்ட ஓபரான் மாற்று மலர்ச்சாறை லைசாண்டரின் கண்களிலும் டைட்டானியாவின் கண்களிலும் பிழிய குழப்பம் முடிவுக்கு வருகிறது. 

ஓபரான் தன் மாயத்தால் நிகழ்ந்த குழப்பத்தை ஒரு கனவு என அனைவரும் உணருமாறு செய்து விடுகிறார். 

ஹெர்மியாவும் லைசாண்டரும் மணம் புரிய தளபதி தீசியஸ் துணை நிற்கிறார். டிமிட்ரியஸ் ஹெலனா மேல் காதல் கொள்கிறான். தளபதி தீசியஸ் ஹிப்போலிட்டா திருமணம் நிகழ்கிறது. நாடகக் குழு தனது நாடகத்தை திருமணக் கொண்டாட்டத்தின் இரவில் அரங்கேற்றுகிறது. 

* ********* ****** *****