Friday 5 July 2024

பழைய தஞ்சாவூர் மாவட்டம் - சில எண்ணங்கள் சில நினைவுகள்

பழைய தஞ்சாவூர் மாவட்டத்து மக்களுக்கு மற்ற மாவட்ட மக்களுக்கு இல்லாத சில வாய்ப்புகள் இருந்தன. முதல் விஷயம் காவேரி தண்ணீர். காவேரி பாயும் சேலம் ஈரோடு பகுதிகளுக்கு இருக்கும் வாய்ப்பை விட பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் நில அமைப்பின் படி கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வயலுக்கும் கூட காவேரி தண்ணீர் சிறு சிறு கால்வாய்களில் வந்து சேர்ந்து விடும். மேலும் தமிழகத்தின் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 90 நாட்கள் மழைப்பொழிவைக் கொடுப்பதால் தண்ணீர் தேவையான அளவுக்கு கிடைக்கும் மாவட்டம் பழைய தஞ்சாவூர் மாவட்டம். விவசாயம் குறித்த அடிப்படைகள் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் முழுமையாகப் புரியும். பழைய தஞ்சாவூரின் காவிரி வடிநிலப் பாசனப் பகுதி என்பது உலகின் நீர்ப்பாசனக் கட்டமைப்பின் அற்புதங்களில் ஒன்று. வயலுக்கு நீர்ப்பாய்ச்சும் வாய்க்காலுக்கு ‘’பாய்ச்சல் கால்’’ என்று பெயர். வயலில் இருந்து தண்ணீரை வடிப்பதற்கு உதவும் வாய்க்காலுக்கு ‘’வடிகால்’’ என்று பெயர். தஞ்சை மாவட்டத்தில் பாய்ச்சல்கால்களும் உண்டு. வடிகால்களும் உண்டு. பாய்ச்சல்காலே வடிகாலாகவும் இரு பயன்பாட்டுக்கும் பயன்படுவது உண்டு. இந்த நீர்ப்பாசன அமைப்பை உருவாக்குவதில் சோழப் பேரரசு பெரும் பங்கு வகித்திருக்கிறது. சோழர்கள் உருவாக்கித் தந்த நீர்ப்பாசன அமைப்பு இன்றும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயன் தருகிறது என்பது உண்மை.

இங்கே எழுப்பப்பட்டுள்ள பேராலயங்கள் சோழர்களால் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆலயங்கள் கல்விச் சாலையாகவும் மருத்துவ நிலையங்களாகவும் கால்நடை மருத்துவச் சாலையாகவும் இசைச் சாலையாகவும் சிற்பச் சாலையாகவும் இருந்துள்ளன.  எனவே இங்குள்ள சமூகங்கள் இலக்கியம், இசை, சிற்பம் ஆகிய விஷயங்கள் குறித்து இயல்பாகவே அறிமுகம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். 

ஒருபுறம் மண்ணின் ஒவ்வொரு துளியையும் நெல்லாய் விளைவிக்கும் காவேரி ஆறு. இன்னொரு புறம் பெரும் இலக்கிய மேதைகளும் இசைக் கலைஞர்களும் . எவரால் பழைய தஞ்சாவூரை மறக்க இயலும்?