உலகை முக்குணங்களின் (சத்வ ரஜோ தமோ) கூட்டிருப்பாகக் காண்கிறது இந்திய மரபு. ஜீவன்கள் எக்குணம் மிகுந்து எக்குணத்தில் பிணைந்து ஜீவித்திருக்கின்றன என்பதே ஒவ்வொரு ஜீவனின் பிறவிக்கதை. ஒரு சாமியார் மடம். உலகியல் அமைப்புகளில் இருந்து விலகி வந்தவர்களின் இடம். உலகியல் பொருளியல் அடிப்படைகளால் ஆனது அல்லது பொருளியல் அடிப்படைகளாலும் ஆனது. ஒரு பம்பரம் உருவாகி கடையில் விற்பனையாகி சிறுவர்களின் கைக்கு வருவது வரையிலான பொருளியல் இயங்குமுறையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர் சாமியார் மடத்து சாமியார்கள். அதை பேசி விவாதித்து விளக்கம் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒரு ஜோல்னாபையில் கஞ்சா சரக்கு இருக்கிறது. அனைவரும் கஞ்சா புகை இழுத்து மயக்கத்தில் ஆழ்கிறார்கள். நாளில் ஒரு வேளையாயினும் திருப்தியான உணவருந்தி கஞ்சா புகை இழுத்து மயக்கம் கொண்டு சித்தர் பாடல்களில் சிலவற்றைப் பாடி ஊர்வலம் வருவது கஞ்சா மட சாமியார்களின் தினசரியை. மடத்து சாமியார் அல்லாத சாமியார்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறும் ஆண்டியப்பன் பெரிய சாமியின் கஞ்சா பங்கை புகைத்து மயங்கி விடுகிறான். பெரிய சாமி அவன் தலையில் தண்ணீர் கொட்டி அவன் மயக்கத்தைக் கலைக்கிறார். சாமானியன் பொருளைப் பற்றி நிற்கிறான். கஞ்சா மடம் கஞ்சாவில் மட்டுமே மயங்கி நிற்கிறது. பொருளியல் வேட்கையை விடவும் கூரானது பொருளியலுக்கு அப்பால் இருப்பதாக நினைத்து மயங்கியிருப்பவர்களின் மயக்கம்.