Saturday, 28 December 2024

சிறுகதை - வீரம்மாளின் காளை - கு.ப.ராஜகோபாலன்

இந்திய மரபு மானுட வாழ்க்கை பந்த பாசங்களால் ஆனது. பந்த பாசங்கள். பந்தம் என்பது பிணைப்பு. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது போல. எங்காவது நகர வேண்டுமென்றால் செல்ல வேண்டுமென்றால் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அறுத்தாக வேண்டும். பாசம் என்பது வழுக்கச் செய்வது. பந்தத்தால் கட்டப்பட்டு பாசத்தால் வழுக்கிச் செல்வதாக இருக்கிறது எளிய மானுட வாழ்க்கை. 

கள்ளர் பெண்ணான வீரம்மாளுக்கு தன் மாமன் காத்தான் மேல் கொள்ளை பிரியம். அவளை மணக்க வேண்டுமெனில் அவளது காளையை ஜல்லிக்கட்டில் ஏறு தழுவ வேண்டும். யாருக்கும் வசப்படாத காளையை போராடித் தழுவி அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் துணியை அவிழ்க்கிறான் காத்தான். விதியின் கணம் ஒன்றில் காளை காத்தான் வயிற்றில் தன் கொம்பை ஏத்தி விடுகிறது. சாவின் விளிம்பில் வீரம்மாளிடம் காளை கழுத்தில் கட்டப்பட்டிருந்த துணியை அளித்து விட்டு கண் மூடுகிறான் காத்தான். ஜல்லிக்கட்டில் ‘’தோத்த கழுதை’’க்கு ரோஷமா என்று கூறி காளை மீது வேல் பாய்ச்சுகிறாள் வீரம்மாள். வீரம்மாளுக்கு தான் காதலித்த மாமனைக் கொன்று விட்டதே என காளை மேல் வருத்தம் இல்லை; ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளை தோற்று விட்டதே என்னும் வருத்தமே இருக்கிறது. காத்தானுக்கு சாகிறோமே என்ற வருத்தம் இல்லை ; வீரம்மாளுக்காக காளையை வென்றோம் என்ற மகிழ்ச்சியே இருக்கிறது. மாமனையும் இழந்து காளையையும் கொன்று விட்டு வீரம்மாள் அடையும் உணர்வு எவ்விதமானது என்பதை வாசகனிடம் விட்டு விடுகிறார் ஆசிரியர்.