Sunday, 29 December 2024

சிறுகதை - எனக்குப் பிடிக்காதவை - துமிலன்

 கதை சொல்லிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆகியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவனுடைய செலவுகளில் பெரும் பகுதி அவன் வீட்டிலிருந்து கிடைத்திருக்கிறது எல்லாரையும் போல. திடீரென அவனுக்குத் திருமணம் செய்து வைத்து உன் குடித்தனத்தை நீயே பார் என்று கூறிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த உலகமும் அதன் போக்குகளும் அவன் நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. இரண்டு யானைகளுக்கு நடுவே நடக்கும் சண்டையை அவற்றின் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான் கதைசொல்லி. 15 ஆண்டுகளுக்கு முன்,ஒரு போகியாக இரண்டு வேளை சாம்பார், ரசம், கிச்சடி என உணவருந்தியவன் கதைசொல்லி. இப்போது அவன் அவற்றை தனக்குப் பிடிக்காதவை என்னும் பட்டியலில் சேர்த்து விட்டான். அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எவனடா கண்டுபிடித்தது இந்த சர்க்கரையை என அலுத்துக் கொண்டு அதனையும் தன் பட்டியலில் இணைக்கிறான். குடும்ப வாழ்க்கையில் யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வெளியூருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ரயில் பிரயாணத்துக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு. அடுப்பெரிக்க வாங்க வேண்டியிருப்பதால் சவுக்கு மரமும் தனக்குப் பிடிக்காதவை பட்டியலில் வைத்துக் கொள்கிறான். அரிசி காய்கறியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதைசொல்லிக்கு லௌகிக வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை பட்டியலில் அதனை சேர்க்கவில்லை என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.