புவிக்கு மேலே இருக்கின்றன உம்பர் உலகங்கள். புவிக்குக் கீழும் இருக்கின்றன பலவித உலகங்கள். அதல விதல பாதாளங்கள். படைப்போன் தடைகளை புவியிலும் புவிக்கு மேலும் புவிக்குக் கீழும் அமைத்தே இருக்கிறான். ஜீவனின் தேர்வு எதுவாயினும் அது தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும். புவி, புவிமேல், புவிகீழ் என எல்லா உலகங்களிலும். அதல விதல பாதாளங்கள் கரியவை. ஆயினும் வலு மிக்கவை. அவை அறியப்படாமல் முழுமை முற்றுணரப்படுவதில்லை என்பதால் எப்போதும் இருப்பவை. தீயவை தீய பயத்தலால் அவற்றை தீயினும் அஞ்சி விலகுகின்றனர் சான்றோர். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர் அறவோர். பலி கேட்பவை சூதின் தெய்வங்கள். தன்னுள் அகழும் ஜீவனின் உயிரை மட்டுமல்ல - மானம் அறிவு பெருமை உறவு என அனைத்தையும்.
சூதாடி பிரதாப முதலியாரின் சூதாட்டக் களத்துக்கு வந்து அவர் மனைவி அவர் கட்டிய தாலியை அறுத்து அவரிடம் வீசி விட்டு செல்கிறாள். ஒரு எதிர்பாராத சவுக்கடியின் வலியை வாசகனுக்குக் கொடுக்கும் கதை.