ஒரு எல்லை வரை, சடங்குகள் சாமானிய வாழ்க்கைக்கு உதவிகரமானவை. சடங்குகளைப் புரிந்து கொள்ளக் கோருகிறது - காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவாறு இருக்கிறது - அவற்றைத் தாண்டிச் செல்வதை அங்கீகரிக்கிறது இந்திய மரபு. பெரும் தீர்த்தம் ஒன்றின் கரையில் வாழும் கலை மனம் கொண்ட ஒருவன் அந்த தீர்த்தத்தின் சௌந்தர்யத்தை தன் சித்தத்தால் நாளும் உணர்கிறான். சாமானிய மனநிலையில் அவன் கலை மனநிலை பொருத்திக் கொள்ளவில்லை. அதை இன்னதென வகுக்காத சஞ்சலமாக அவன் உணர்கிறான். அந்த உணர்வை தன் பாணியில் அழகாய் கூறி அழகாய் சித்தரித்து அமையும் தி.ஜானகிராமன் கதைக்குள் கதை என இன்னொரு கதையை சிறுகதைக்குள் கொண்டு வந்து அவற்றை ஒன்றைப் பிரதிபலிக்கும் இரண்டு ஆடிகளாக ஆக்குகிறார். அவை ஒன்றை ஒன்று பிரதிபலித்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன.